ஹைதராபாத்: தெலங்கானா மாநில தலைநகரமான ஹைதராபாத்தில் உள்ள ஜூப்லி ஹில்ஸ் பகுதியில் கடந்த மே 28 அன்று 17 வயது பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக ஆறு பேரை ஜூன் மாதத்தில் காவல்துறையினர் கைது செய்தனர். ஆறு பேரில் ஒருவன் மட்டுமே 18 வயது நிரம்பியவன். எஞ்சிய 5 பேரும் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள்.
கடந்த மே 28 அன்று இரவில் ஹைதராபாத்தில் ஜூப்லி ஹில்ஸ் பகுதியில் உள்ள பப்பிற்கு விருந்திற்கு சென்ற அந்த 17 வயது சிறுமியை ஆறு பேரும் தங்களது வாகனத்தில் ஏற்றி வீட்டில் கொண்டு விடுவதாக கூறியுள்ளனர்.
இதனை நம்பி ஏறிய அந்த சிறுமியை ஆறு பேரும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதில் ஒரு 17 வயது சிறுவன் மட்டும் தவறான செய்கைகளில் ஈடுபட்டதாகவும், வன்கொடுமை செய்யவில்லை எனவும் காவல் துறையினர் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து மைனர் குற்றவாளிகள் 5 பேரில் 4 பேருக்கு சிறார் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. மேலும் மற்றவர்களுக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இருப்பினும் 18 வயது நிரம்பியவன் சிறையில் அடைக்கப்பட்டான்.
தற்போது ஹைதராபாத் காவல்துறையினர் இந்த வழக்கு குறித்த குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளனர். இதில் 350 பக்கங்களுக்கு வழக்கின் விவரம் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக 65 சாட்சிகள் இடம்பெற்றுள்ளனர்.
இது குறித்து காவல்துறை உயர் அதிகாரி கூறுகையில், ‘திருத்தப்பட்ட சிறார் நீதி சட்டத்தின் விதிகளின்படி, அதிகபட்ச தண்டனை கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில், அந்த சிறுவர்களை பெரியவர்களாகக் கருதி விசாரிக்கக் கோரி நீதிமன்றத்திடம் இன்று(ஜூலை 29) கோரிக்கை விடுக்கப்படும் என கூறினார். மேலும் குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக கடுமையான சட்டப் பிரிவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், பிரிவுகளின் கீழ் ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை கூட விதிக்கப்படலாம் என்றும் போலீசார் கூறியுள்ளனர்.
இதையும் படிங்க:ஹைதராபாத் சிறுமி கூட்டுப்பாலியல் வன்கொடுமை முன்கூட்டியே திட்டமிடப்பட்டது: விசாரணையில் பகீர் தகவல்!