ஐந்து நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ச, பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரை நேற்று சந்தித்து பேசினார். இதையடுத்து, இன்று வாரணாசியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி விமான நிலையத்திற்குச் சென்ற அவருக்கு, அரசு மரியாதை வழங்கப்பட்டது. பின்னர், காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் சென்ற அவர், பூஜையில் கலந்துகொண்டார்.
அங்கிருந்து, கால பைரவர் கோயிலுக்குச் சென்று ராஜபக்ச வழிபாடு மேற்கொண்டார். தற்போது, விடுதியில் ஓய்வெடுத்துவரும் அவர், சார்நாத்துக்கு சென்று புத்தர் கோயிலில் வழிபாடு மேற்கொள்ளவுள்ளார். மஹிந்த ராஜபக்ச பிரதமராக பதிவியேற்ற பிறகு மேற்கொண்ட முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும்.
பிகாரில் உள்ள புத்த கயாவிற்கு பிப்ரவரி 10ஆம் தேதி சென்று மகாபோதி கோயிலில் வழிபாடு மேற்கொள்ளவுள்ளார். பின்னர், அவர் திருப்பதிக்குச் செல்லவுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச நவம்பர் மாதம் இந்தியாவிற்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கங்கையில் மகா பூர்ணிமா வழிபாடு