இந்தியாவின் பல மாநிலங்களில் தீவிரமடைந்து வருகிற கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. வேகமாக பரவி வரும் இதைத் தடுக்க மே 30ஆம் தேதி வரை முழுமையான முடக்கத்தை மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன.
மேலும், வைரஸ் தொற்றின் சமூகப் பரவலை தடுக்க மக்கள் பொது இடங்களில் கூடவும் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகள், ஆலைகள், வணிக நிறுவனங்கள், சிறு குறு நிறுவனங்கள், சாலையோர கடைகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. கரோனா வைரஸின் அச்சுறுத்தல் சமூகத்தின் அனைத்து பிரிவுகளையும் பாதித்திருந்தாலும், நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் ஏழை, எளிய மக்களை அதிகம் பாதித்துள்ளது.
கடும் பொருளாதார நெருக்கடிக்குள்ளாகி இருக்கும் இந்த குடிபெயர்ந்த கூலித் தொழிலாளர்கள், நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள தங்களது சொந்த கிராமங்களை நோக்கி சிறு குழந்தைகளை, வயதானவர்களைத் தோளில் சுமந்து கொண்டு, நகரத்தை விட்டு வெளியேறினர். ஏறத்தாழ 18 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்ததாக அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இரண்டு மாதங்களுக்கும் மேலாக முடக்கப்பட்டிருக்கும் தொழில்சாலைகளை வாழ்வாதாரமாக நம்பி நின்ற மக்களின் தொடர் துயர், நாட்டின் தொழிலாளர் நிர்வாகத்தில் இருக்கும் தவறுகளை அம்பலப்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள தொழிலாளர்களில் சுமார் 90 விழுக்காடு அமைப்புசாரா துறையில் இருப்பதாகவும், வேலைகளுக்காக குடிபெயர்ந்த வெளிமாநில தொழிலாளர்களுக்கு சில மணிநேரங்களில் சென்றடைந்திருக்க வேண்டிய உதவிகளைக் கூட செய்ய முடியாத நிலையில் இன்னும் தொடர்கிறது. அவர்களுக்கான் சமூக பாதுகாப்பு நடவடிக்கைகளை உருவாக்குவதற்கு சிறிதளவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை என அண்மையில் வெளியாகியுள்ள பல்வேறு ஆய்வுகளும் கருத்து தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழக பேராசிரியர் அமித் பசோல் கூறுகையில், “ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து நிற்கும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு நிவாரணம் சென்றடைவதை உறுதி செய்ய, அவர்கள் குறித்த தகவல்களும் தரவுகளும் அரசாங்கத்திடம் இருக்க வேண்டும். துல்லியமான தரவுகளை வைத்திருப்பதன் நன்மைகள் குறித்து நாம் இப்போது உணர்ந்திருப்போம். தொழிலாளர்கள் எங்கு வேலை செய்கிறார்கள் ? அவர்களின் பணி என்ன ? அவர்களின் சொந்த மாநிலங்கள் எவை ? என்பன போன்ற தரவுகள் தொழிலாளர்களுக்கு இது போன்ற இடர்காலங்களில் அரசின் உதவிகளை வழங்க நிர்வாகங்களுக்கு உதவும்.

மும்பை, டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் சென்னை போன்ற நகரங்களில் பொதுவாக நாட்டில் அதிக எண்ணிக்கையில் குடிபெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளனர். பெரும்பாலும் அங்கெல்லாம் அவர்கள் நெருக்கடிக்கு கடுமையாக முகங்கொடுத்துள்ளனர். தொழிலாளர்களின் தற்போதைய அவலநிலை அரசாங்கத்திற்கும் கொள்கை வகுப்பாளர்களுக்கும் ஒரு முக்கியமான பாடத்தை கற்பித்துள்ளது” என்றார்.
இதையும் படிங்க : குஜராத் கரோனா மரணங்களுக்கு யார் காரணம்?