நாட்டின் 74ஆவது சுதந்திர தின விழா நாளை கொண்டாடப்படவுள்ளது. இதனால், நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலபடுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் நவுகாம் கிராமத்தில் காவல் துறையினர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் இரு காவலர்கள் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து அருகில் இருந்த மருத்துவமனையில் படுகாயம் அடைந்த காவலர்கள் சேர்க்கப்பட்டனர். ஆனால், அவர்களில் இருவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியை தற்போது காவல் துறையினர் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துள்ளனர். இது குறித்து ஜம்மு காஷ்மீர் காவல்துறை தனது ட்விட்டர் பக்கத்தில், "நவுகாம் புறவழிச்சாலையில் காவல் துறையினர் மீது பயங்கரவாதிகள் சரமாரியாகத் தாக்குதல் நடத்தினர்.
மூவர் படுகாயம் அடைந்த நிலையில், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால், இருவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அப்பகுதியை தற்போது கட்டுப்பாட்டில் எடுத்துள்ளோம்" எனப் பதிவிடப்பட்டுள்ளது.
உயிரிழந்த காவலர்களின் பெயர் இஷ்பக் அகமது, ஃபயாஸ் அகமது என தெரியவந்துள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்கின் பல்வேறு பகுதிகளில் சுதந்திர கொண்டாட்டத்தை முன்னிட்டு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தாக்குதலை தொடர்ந்து, பள்ளத்தாக்கு பகுதி முழுவதும் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: கரோனா மருந்தை விநியோகம் செய்வதற்கான திட்டத்தை அறிவிக்க வேண்டும் - ராகுல் காந்தி