இந்தச் சமூக ஊடக விழிப்புணர்வுப் பரப்புரையை உலக சுகாதார அமைப்பு #SafeHandsChallenge என்ற ஹேஷ்டேக் நேற்று தொடங்கியது. இந்த ஹேஷ்டேக் உலக அளவில் ட்ரெண்டாகிவருகிறது.
சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை ஊக்குவிப்பதற்கும், கரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையிலும் இந்தியாவில் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இரானி நேற்று இந்த #SafeHandsChallenge இல் பங்கெடுத்தார். அதனோடு, இந்தச் சவாலில் கலந்துகொள்ளுமாறு கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த்திற்கு அவர் அழைப்புவிடுத்திருந்தார்.
இன்று அந்தச் சவாலை ஏற்று அதில் பங்கெடுத்த கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “#கோவிட்19 பரவுவதைத் தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் நாங்கள் எடுப்பதை உறுதிசெய்வோம்.
மேலும் நான் இந்தச் சவாலில் பங்கேற்க மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சர் மன்சுக் மாண்டவியா, கோவா மாநில பாஜக பொதுச்செயலாளர் நரேந்திர சவாய்கர் உள்ளிட்டோர் இந்தச் சவாலை ஏற்க வேண்டுகிறேன்” எனப் பதிந்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள குறுகிய காணொலியில், உலக சுகாதார அமைப்பு அலுவலர்களால் பரிந்துரைக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஒன்றான கிருமி நாசினியைக் கொண்டு கைகளைக் கழுவுவதைக் காண முடிகிறது.
இதையும் படிங்க : கரோனா பாதிப்பு: நாளை முதல் 168 ரயில்கள் ரத்து