காங்கிரஸ் மூத்தத் தலைவர் அபிஷேக் மனு சிங்வி நாளை மாநிலங்களவையில் தனிநபர் மசோதா ஒன்றை தாக்கல்செய்யவுள்ளார். மக்கள் தொகை கட்டுப்பாட்டு மசோதா, 2020 என்ற பெயரில் தாக்கல்செய்யப்படவுள்ள இந்த மசோதாவை தாக்கல்செய்ய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
நாட்டில் அதிகரித்துவரும் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இரண்டு குழந்தைகள் வரை மட்டுமே பெற்றுக்கொள்ளும் திட்டத்தை தீவிரப்படுத்தும்விதமாக இந்த மசோதா தாக்கல்செய்யப்படவுள்ளதாக சிங்வி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், வறுமைக் கோட்டிற்குகீழ் வாழும் தம்பதி இரண்டு அல்லது ஒரு குழந்தை மட்டுமே வைத்திருந்தால் அவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் அளவிற்கு ஊக்கத்தொகை அளிக்கலாம் எனவும் இந்த மசோதாவில் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் தொகை கட்டுப்பாடு, குடும்பக் கட்டுப்பாட்டை வற்புறுத்தலின்பேரில் திணிக்காமல் கவர்ச்சிகரமான திட்டம் மூலம் செயல்பாட்டில் கொண்டுவரலாம் என்பதே இந்த மசோதாவின் மையக் கருத்தாக வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஈரானிலிருந்து 234 இந்தியர்கள் மீட்பு