இந்தியா - சீனா எல்லையில் தொடர்ந்து பிரச்னை நிலவிவருகிறது. கடந்த மாதம் இந்திய எல்லைப் பகுதியில் ராணுவ அலுவலர்கள் மேற்கொண்டுவந்த கட்டமைப்புப் பணிகளின்போது, சீன ராணுவம் அத்துமீறி உள்ளே நுழைந்தது. இந்திய ராணுவத்தின் பணிகள் தொடர்பாக கேள்வி எழுப்பிய சீன வீரர்களால் பிரச்னை வெடித்தது.
அப்போது இருநாட்டு வீரர்களும் கட்டை, கம்பிகள் கொண்டு தாக்கிக்கொண்டனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து இருநாட்டு உயர் அலுவலர்களும் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருகின்றனர். அதன் காரணமாக பிரச்னை தணிந்ததாகத் தோற்றம் ஏற்பட்டது.
இந்தச் சூழலில், இந்தியாவின் எல்லைப் பகுதியான கல்வான் பள்ளத்தாக்கு அருகே ஜூன் 15 இரவு பணியிலிருந்த ராணுவ அலுவலர் கர்னல் சந்தோஷ் பாபு உள்ளிட்ட இந்திய படைவீரர்களை சீன ராணுவத்தினர் காட்டுமிராண்டித்தனமாக ஆயுதங்களைக் கொண்டு தாக்கியுள்ளனர்.
நீண்ட நேரமாகியும் சந்தோஷ் பாபு திரும்பாததால், இந்திய ராணுவ வீரர்கள் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று பார்த்தபோது, சீன ராணுவத்தினர் அவரை அடித்து துன்புறுத்தியதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்திய வீரர்கள், சீன தரப்பினரிடம் கர்னல் சந்தோஷை விட்டுவிடக் கோரி நட்பு ரீதியான சைகைகளைக் காண்பித்தும் அவர்கள் அவரை விடமால் அடித்து கொன்றுள்ளனர்.
சைகை காட்டிய இந்திய ராணுவத்தைச் சேர்ந்த சில வீரர்களையும் கைது செய்து, அவர்களின் முகத்திற்கு நேர துப்பாக்கிகளைக் காட்டி, அவர்களையும் கொடூரமாகச் சித்ரவதை செய்துள்ளனர்.
இந்திய வீரர்களுக்கு எதிராக அனைத்து வகையான ஆயுதங்களையும் பயன்படுத்தியதாகவும் தெரிகிறது.
கிழக்கு லடாக்கில் ரோந்துப் பணியிலிருந்த எண் 14 ஆம் வரிசையைச் சேர்ந்த சீன ராணுவத்தினர் தான் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.
அந்த சர்ச்சைக்குரிய நிலப்பரப்பில் இந்திய ராணுவ வீரர்கள் மீது கொடூர தாக்குதலைத் தொடங்குவதற்கு முன்னர் சீன ராணுவம் ட்ரோன்களைப் பயன்படுத்தி நிலவரத்தை நோட்டமிட்டே இத்தனை அட்டூழியங்களையும் புரிந்துள்ளனர்.
லடாக் பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் தாக்குதல் நடந்த இடத்திலிருந்து சடலங்கள் மற்றும் காயமடைந்த இந்திய ராணுவ வீரர்களை கொண்டுவர இந்திய ஹெலிகாப்டர்கள் சுமார் 16 முறை பறந்தன என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்திய இராணுவ வீரர்களின் நான்கு உடல்கள் மட்டும் கல்வான் பள்ளத்தாக்கிலிருந்து லேவுக்கு கொண்டுவரப்பட்டன.
திங்கள் கிழமை இரவு கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த இந்தத் தாக்குதலில் இந்தியா ராணுவத்தைச் சேர்ந்த 20 பேர் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்தது.
பல வீரர்கள் படுகாயமடைந்துள்ளதால், இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என நம்பத் தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
தேசத்தின் பிராந்திய ஒருமைப்பாட்டையும் இறையாண்மையையும் பாதுகாக்க இந்திய ராணுவம் உறுதியாக இருப்பதாக ராணுவ அலுவலகம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.