சிவகங்கை: சிவகங்கை 48 காலனி பகுதியில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி வேனானது 18 மாணவர்களை அழைத்துக் கொண்டு காளையார் கோயில் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது, வேன் நாட்டரசன் கோட்டை அருகே பி.குளத்துப்பட்டி விலக்கு வளைவில் திரும்பிய போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர், காயமடைந்த மாணவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த தகவல் அறிந்து வந்த போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தில் 2 மாணவர்கள் சிறுகாயமடைந்த நிலையில், பிற மாணவர்கள் எவ்வித பாதிப்பும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.