சென்னை: என்ஐஏவின் தென்மண்டல இயக்குநர் சந்தோஷ் ரஸ்தோகி நேற்று (ஆக.29) சென்னை காவல் ஆணையரகத்தில், சென்னை மாநாகர காவல் ஆணையர் அருணை நேரில் சந்தித்துப் பேசி ஆலோசனை நடத்தினார். அதில், சென்னை காவல்துறை மற்றும் என்ஐஏவுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில், கலந்துரையாடியதாகக் கூறப்படுகிறது.
இந்த உயர்மட்டக் கூட்டத்தில் பல்வேறு பிராந்திய பிரச்சனைகள் மற்றும் பரஸ்பர நலன் சார்ந்த குறிப்பிட்ட நிகழ்வுகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. மேலும், இரு துறைகளுக்கிடையில் சிறந்த ஒருங்கிணைப்பு மற்றும் தடையற்ற தகவல் பரிமாற்றத்தை வளர்ப்பதன் முக்கியதும் குறித்தும், தேசியப் பாதுகாப்பு சம்பந்தமான முக்கிய வழக்குகளை திறம்படப் புலன் விசாரணை செய்ய ஏதுவாக சென்னை பெருநகர காவல்துறைக்கு என்ஐஏ அதிகாரிகள் மூலம் பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சென்னை காவல் ஆணையரகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.