சென்னை: மலையேறுபவர்கள் விரும்புபவர்கள், மலையேற்ற பயிற்சிகள் மேற்கொள்ளும் நபர்கள் பயன்பெறும் வகையில், எளிதான, மிதமான மற்றும் கடினமான வகைகளில் 40 பாதைகளின் விரிவான பட்டியலை வனத்துறை உருவாக்கியுள்ளது. ஆன்லைனில் பணம் செலுத்துவதன் வாயிலாக இந்த பாதைகளில் மலையேற்றத்தை மக்கள் மேற்கொள்ள முடியும்.
டிரெக் தமிழ்நாடு (Trek Tamil Nadu) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தை, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் பொன்முடி ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர். தமிழ்நாடு வனத்துறை, தமிழ்நாடு வன அனுபவக் கழகம், மாநில அரசின் கூட்டு முயற்சியாக உருவாக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தின் www.trektamilnadu.com என்ற இணையதளத்தையும் அறிமுகம் செய்து வைத்தனர்.
தமிழ்நாடு மலையேற்ற திட்டம் & முன்பதிவு வலைத்தளம் " https://t.co/tsSIdYyK2c" தொடக்கம்#CMMKSTALIN | #DyCMUdhay | #TNDIPR | @CMOTamilnadu @mkstalin@Udhaystalin @KPonmudiMLA @mp_saminathan@tnforestdept pic.twitter.com/Swwi9zHkH6
— TN DIPR (@TNDIPRNEWS) October 24, 2024
இந்த இணையதளத்தில் தமிழ்நாட்டில் உள்ள 40 அழகிய, மலையேற்ற வழித்தடங்களின் பட்டியல் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், " இயற்கை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தவும் வனப்பகுதியை ஒட்டியுள்ள உள்ளூர் மக்களுக்கு நிலையான வாழ்வாதாரத்தை ஏற்படுத்தவும், வனம் மற்றும் வன உயிரின பாதுகாப்பிற்கு வலுசேர்க்கும் விதமாக இந்த 'தமிழ்நாடு மலையேற்ற திட்டம்' வடிவமைக்கப்பட்டுள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது.
வாகன பயன்பாடு இல்லாத குறைந்த கார்பன் தடம், நிலைத்தன்மை கொண்ட சுற்றுலாவை ஊக்குவிப்பது, சூழல் சுற்றுலாவை மேம்படுத்துதல் மற்றும் பசுமைச் சூழல் பாதுகாப்பதில் தமிழ்நாடு அரசு கொண்டுள்ள உறுதித்தன்மையை இது காட்டுவதாகவும் அந்த செய்தியறிக்கை கூறுகிறது.
இயற்கை ஆர்வலர்களை மகிழ்விக்கும் விதமாக, இந்திய நாட்டின் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு அரசு 40 தேர்ந்தெடுக்கப்பட்ட மலையேற்ற பாதைகளை பொது மக்களுக்காக திறந்து வைத்துள்ளது. சுற்றுலாவில் நாட்டின் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. இயற்கை ஆர்வலர்களால் பெரிதும் போற்றப்படும் வகையில் தமிழ்நாட்டில் மொத்தம் ஐந்து புலிகள் காப்பகங்கள், ஐந்து தேசிய பூங்காக்கள். பதினெட்டு வனவிலங்கு சரணாலயங்கள், பதினேழு பறவை சரணாலயங்கள் மற்றும் மூன்று பாதுகாப்பு காப்பகங்களை கொண்டுள்ளது. நீலகிரி, கொடைக்கானல் மற்றும் கன்னியாகுமரி போன்ற பிரபலமான சுற்றுலா தலங்களை உள்ளடக்கி தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் உள்ள மலையேற்றப்பாதைகள், தமிழ்நாடு வனத்துறையால் தமிழ்நாடு வன மற்றும் உயிரின (மலையேற்ற ஒழுங்குமுறை) விதிகள் 2018-ன் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
மலையேற்ற வழிகாட்டிகளாக காடுகள் குறித்த பாரம்பரிய அறிவைக் கொண்ட, 50-க்கும் மேற்பட்ட பழங்குடியின மற்றும் வனங்களை ஒட்டியுள்ள கிராமங்களிலிருந்து 300-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அடையாளம் காணப்பட்டு,மலையேற்ற வழிகாட்டிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு வன ஒழுக்கம், திறன் மேம்பாடு, முதலுதவி, விருந்தோம்பல் மற்றும் சுகாதாரம், பல்லுயிர் பாதுகாப்பு போன்றவற்றில் போதுமான தொழில்முறை பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
அடிப்படை உபகரணங்கள் உண்டு: மலையேற்றத்திற்கு வரும் ஆர்வலர்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளித்து தேர்ந்தெடுக்கப்பட்ட மலையேற்ற வழிகாட்டிகளுக்கு அவசர நிலைகளைக் கையாளுவதற்கான பாதுகாப்பு நெறிமுறை பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளன. தேர்ந்தெடுக்கப்பட்ட வழிகாட்டிகளுக்கு சீருடைகள், மலையேற்றக் காலணிகள், முதுகுப்பை, தொப்பி, அடிப்படை முதலுதவிப் பெட்டி, தண்ணீர் குடுவை, வெந்நீர் குடுவை, மலையேற்றக் கோல், தகவல் தொடர்பு சாதனங்கள், விசில் மற்றும் திசைக்காட்டி ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.
அனைவருக்கும் காப்பீடு: மேலும், இத்திட்டத்தின் கீழ் மலையேற்றம் மேற்கொள்ளும் அனைத்து பங்கேற்பாளர்கள் மற்றும் வழிகாட்டிகளுக்குக்கும் காப்பீடு வழங்கப்படுகிறது. பழங்குடியின மற்றும் வனங்களை ஒட்டியுள்ள மக்கள் நிலையான வருமானம் ஈட்டவும் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கும் இந்த முன்னெடுப்பு உதவும். தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்டுள்ள (www.trektamilnadu.com) என்ற பிரத்யேக முன்பதிவு வலைதளத்தின் மூலம் மலையேற்றம் மேற்கொள்பவர்கள் தங்கள் முன்பதிவினை எளிதாக செய்ய முடியும்.
எப்படி முன்பதிவு செய்வது?: இந்த இணையதளத்தில் புகைப்படம், காணொளிக்காட்சிகள், 3D அனிமேஷன். மலையேற்ற பாதைகள் தொடர்பான அத்தியாவசிய விவரங்கள், விதிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும், இவ்வலைதளத்தின் மூலம் மலையேற்றம் மேற்கொள்பவர்கள் 100% இணையவழி பணப்பரிவர்த்தனை (Online Transaction) மேற்கொண்டு மலையேற்றத்திற்கான நுழைவு சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
மலையேற்றத்திற்கு தகுதி என்ன?: 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் மலையேற்றத்திற்கான முன்பதிவு மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர். 18 வயதிற்குட்பட்டவர்கள் பெற்றோர் / பாதுகாவலரின் ஒப்புதல் கடிதத்துடன் மலையேற்றம் மேற்கொள்ளலாம். 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் (எளிதான மலையேற்ற பாதைகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவர்) பெற்றோர் அல்லது பாதுகாவலரின் துணையோடு மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
40 மலையேற்றப் பாதைகள்: மாவட்ட வாரியாக மலையேற்றப்பாதைகள் அவற்றின் தன்மையுடன் பட்டியலிடப்பட்டுள்ளன.
மாவட்டம் | மலையேற்றப்பாதை |
---|---|
நீலகிரி | கய்ரன் ஹில் (எளிது), லாங்வுட் ஷோலா (எளிது), கரிகையூர் முதல் போரிவரை ராக் பெயிண்டிங் (மிதமானது), கரிகையூர் முதல் ரங்கசாமி சிகரம் (கடினம்), பார்சன்ஸ் வேலி முதல் முக்குர்த்தி குடில் (கடினம்), அவலாஞ்சி கோலாரிபெட்டா (கடினம்), அவலாஞ்சி (காலிஃபிளவர் ஷோலா) தேவார்பெட்டா (கடினம்), அவலாஞ்சி (காலிஃபிளவர் ஷோலா)- கோலாரிபெட்டா (மிதமானது), ஜீன் பூல் (எளிது), நீடில் ராக் (கடினம்). |
கோயம்புத்தூர் | மாணம்போலி (எளிது), டாப் ஸ்லிப் (கடினம்), ஆலியார் கனால் பேங்க் (மிதமானது), சாடிவயல் பண்டாரவரை சிறுவாணி (மிதமானது), செம்புக்கரை பெருமாள்முடி (கடினம்), வெள்ளியங்கிரி மலை (கடினம்), பரலியார் (எளிது). |
திருப்பூர் | சின்னார் சோதனைச்சாவடி கோட்டாறு (எளிது). |
கன்னியாகுமரி | காளிகேசம் பாலமோர் (மிதமானது), இஞ்சக்கடவு (மிதமானது). |
திருநெல்வேலி | காரையார் மூலக்கசம் (மிதமானது), கல்லாறு கொரக்கநாதர் கோவில் (கடினம்). |
தென்காசி | குற்றாலம் செண்பகதேவி அருவி (எளிது), தீர்த்தப்பாறை (எளிது). |
தேனி | சின்ன சுருளி - தென்பழனி (மிதமானது), காரப்பாறை (எளிது), குரங்கனி சாம்பலாறு (மிதமானது). |
விருதுநகர் | செண்பகத்தோப்பு - புதுப்பட்டி (மிதமானது). |
மதுரை | குட்லாடம்பட்டி அருவி முதல் தாடகை மலையேற்றப்பாதை (மிதமானது). |
திண்டுக்கல் | வட்டகானல் வெள்ளகவி (கடினம்), சோலார் ஆப்சர்வேட்டரி - குண்டாறு (0-பாயிண்ட்) (மிதமானது), O-பாயிண்ட் முதல் கருங்கஞ்சம் அருவி (எளிது) |
கிருஷ்ணகிரி | குத்திராயன் சிகரம் (கடினம்), ஐயூர் சாமி எரி (எளிது). |
சேலம் | குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா குண்டூர் (மிதமானது), கொண்டப்ப நாயக்கன்பட்டி குண்டூர் (கடினம்), நகலூர் - சன்னியாசிமலை (எளிது). |
திருப்பத்தூர் | ஏலகிரி முதல் சாமிமலை (எளிது), ஜலகம்பாறை (மிதமானது). |
திருவள்ளூர் | குடியம் குகை (எளிது). |