ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி கடல் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த பைபர் படகை மடக்கிய இந்திய கடலோர காவல் படையினர், படகிலிருந்த இலங்கையை சேர்ந்த மூன்று மீனவர்களை கைது செய்துள்ளனர்.
தொண்டி கடற்பகுதியில் கடலோர காவல் படையினர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக பைபர் படகு நின்று கொண்டிருந்துள்ளது. இதனையடுத்து, படகை மடக்கிய காவல் படையினர், அதிலிருந்த இலங்கையை சேர்ந்த 3 மீனவர்களை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: இலங்கையில் தமிழக மீனவர்களுக்கு மொட்டை அடித்ததாக ராமேஸ்வரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்!
நடுக்கடலில் மீனவர்களிடம் நடத்திய முதல் கட்ட விசாரணையில் காற்றின் வேகம் காரணமாக படகு திசை மாறி இந்திய கடற்பரப்புக்குள் வந்ததாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, அவர்களை மண்டபம் கடலோர காவல்படை முகாமிற்கு அழைத்து வந்துள்ளனர்.
அங்கு முழுமையான விசாரணைக்கு பிறகே, மீனவர்கள் சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக இந்திய கடற்பகுதியில் வந்தார்களா? அல்லது எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டார்களா? என்பது தெரியவரும் என இந்திய கடலோர காவல் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.