சென்னை: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்து அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக அளிக்கப்பட்ட புகாரில், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகார் மற்றும் அனுமதியின்றி போராட்டம் நடத்தி கரோனா விதிகளை மீறியதாகவும் இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதையடுத்து, விழுப்புரம் நகர காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி சி.வி. சண்முகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் இன்று பிறப்பித்த தீர்ப்பில், அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்துவது பொதுவானது. அதற்காக வழக்குகள் பதிவு செய்ய முடியாது. சி.வி சண்முகத்தின் போராட்டத்தால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டதாக அரசு கூறுவதை ஏற்க முடியாது.
போராட்டம் நடந்ததாக கூறப்படும் காலத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யாமல் ஒரு ஆண்டுக்கு பின் வழக்கில் முகாந்திரம் இருப்பதாக காவல்துறை வழக்கு தொடர்ந்ததை ஏற்க முடியாது. கரோனா வழிகாட்டுதல்களை மீறப்பட்டுள்ளதாக கூறுவதை ஏற்க முடியாது. போராட்டத்தில் அரசுக்கு எதிராக அவதூறாக பேசியதற்கான ஆதாரங்கள் இல்லை.
காரணங்களே இல்லாமல் வழக்கை தொடர அனுமதித்தால் அது தவறான முன்னுதாரமாக ஆகிவிடும். முதல் விசாரணை அதிகாரிக்கு ஆதாரங்கள் இல்லாத நிலையில், இரண்டாவது விசாரணை அதிகாரிக்கு எப்படி ஆதாரங்கள் கிடைத்தது. ஒரே காரணத்திற்காக இரண்டு வழக்குகள் போடுவதை ஏற்க முடியாது என தெரிவித்து சி.வி சண்முகத்தின் மீதான வழக்கை ரத்து செய்து தீர்ப்பளித்தார்.
இதையும் படிங்க: நாவல் பழத்தால் பறிபோனதா உயிர்? 7ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்புக்கு என்ன காரணம்?