தேனி: தமிழக - கேரள எல்லையில் 152 அடி உயரம் கொண்ட முல்லைப் பெரியாறு அணை உள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக இந்த அணை விளங்கி வருகிறது. நடப்பாண்டில் முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் சில மாதங்களாக மழை சரிவர பெய்யவில்லை. இதனால் அணைக்கு நீர்வரத்து குறைந்தது.
அதேபோல், அணையின் நீர்மட்டமும் வேகமாக குறைந்து வந்தது. இந்த நிலையில் முல்லைப் பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக பெய்த கனமழையால் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3 ஆயிரத்து 759 கன அடியாக அதிகரித்தது.
ஒரே நாளில் நீர்மட்டம் ஒரு அடி உயர்ந்து 119.90 அடியாக உயர்ந்தது. முல்லைப் பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. நேற்று இரவு பெய்த பலத்த கனமழையால் இன்று காலை 6:00 மணி நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3759 கன அடியாக அதிகரித்தது. நீர்ப்பிடிப்பு பகுதியான தேக்கடியில் 53.4 மி.மீ., பெரியாறில் 74.8 மி.மீ., மழை பதிவானது. நீர் இருப்பு 2610 மில்லியன் கன அடியாக உயர்ந்தது.
இதனால், தமிழக பகுதிக்கு 745 கன அடியாக திறக்கப்பட்டிருந்த நீர், இன்று காலை 6:00 மணிக்கு 967 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. நீர் திறப்பு திடீரென அதிகரிப்பதால் லோயர்கேம்பில் இருந்து வீரபாண்டி வரையுள்ள முல்லைப் பெரியாற்றின் கரையோர பகுதியில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி, நீர்வளத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் எச்சரித்துள்ளனர். கரைப்பகுதியில் துணி துவைக்கவோ, குளிக்கவோ கூடாது என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
அதிகளவு நீர் திறக்கப்பட்டுள்ளதால் கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முல்லைப் பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால் அணையின் நீர்மட்டம் 119 அடியை தாண்டியது. அதிகளவு நீர் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: பாபநாசம் கோயிலில் தர்ப்பணம்... தாமிரபரணி ஆற்றை ஆய்வு செய்ய நெல்லை கலெக்டருக்கு உத்தரவு! - Madurai Bench Of Madras High Court