தஞ்சாவூர்: முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 55-வது நினைவு நாளை முன்னிட்டு, இன்று (பிப்.3) தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணாவின் உருவச் சிலைக்கு மாவட்டச் செயலாளர் சந்திரசேகரன் தலைமையில், எம்பி பழனிமாணிக்கம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தஞ்சை கீழவாசல் பகுதியிலிருந்து முக்கிய வீதிகள் வழியாக பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணாவின் சிலைக்கு எம்எல்ஏ நீலமேகம், மேயர் இராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் ஊர்வலமாக வந்து, மாலை அணிவித்து ஒரு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தினர். இதில் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிர் அணியினர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பின்னர், நிகழ்ச்சியில் எம்பி பழனிமாணிக்கம் பேசுகையில், “நிலத்தால், மொழியால், கலாச்சாரத்தால் சிறந்து நின்ற தமிழினம் வீழ்வதைக் கண்டு, இனத்தின் பெருமையையும், கலாச்சாரத்தின் உயர்வையும், மொழியின் சிறப்பையும் தமிழ்நாட்டு இளைஞர்களிடையே எடுத்துக் காட்டி, குறுகிய காலத்தில் இந்தியாவில் மாற்று அரசாங்கத்தை உருவாக்கியவர். இரு மொழிக் கொள்கை மற்றும் சுயமரியாதை திருமணத்தைச் சட்டமாக்கி, தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என பெயர் சூட்டியர் அண்ணா” என புகழாரம் சூட்டினார்.
அதனைத் தொடர்ந்து, அண்ணாவின் உருவச் சிலைக்கு மாவட்டச் செயலாளர் சேகர் தலைமையில், முன்னாள் மேயர் சாவித்திரி கோபால், மாநகரச் செயலாளர் சரவணன் உள்ளிட்டோர் மாலை அணிவித்தும், ஒரு நிமிடம் மௌனம் செலுத்தியும் மரியாதை செலுத்தினர்.
அதேபோல், தஞ்சை சிவகங்கை பூங்காவிலிருந்து முக்கிய வீதிகள் வழியாக பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணாவின் சிலைக்கு, அதிமுகவினர் ஊர்வலமாக வந்து மாலை அணிவித்தனர். இதில், அமைப்புச் செயலாளர் காந்தி, கொள்கை பரப்பு துணைச் செயலாளர் திருஞானம், விவசாயப் பிரிவு இணைச் செயலாளர் ராஜமாணிக்கம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிர் அணியினர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: “தடை செய்யப்பட்ட அமைப்புடன் தொடர்புடைய ஆவணங்கள் கைப்பற்றல்” - நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் இடங்களில் நடத்தப்பட்ட சோதனைக்கு என்ஐஏ விளக்கம்!