சென்னை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருத்துவத் துறை ஆகிய துறைகள் சென்னை பெருநகர மாநகராட்சியுடன் இணைந்து, வேளச்சேரி பகுதியில் வயிற்றுப்போக்கு தடுப்பு மற்றும் வைட்டமின் ஏ வழங்கும் முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் இன்று துவக்கி வைத்தார்.
இதில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ககன்தீப் சிங்பேடி, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், "மழைக்காலங்களில் ஏற்படக்கூடிய வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம்கள் தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
துணை சுகாதார நிலையங்கள், ஆரம்பச் சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிக்கூடங்கள் என்று தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இந்த முகாம்கள் தொடர்ச்சியாக நடைபெற உள்ளது.
ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் இறப்புக்கு மிக முக்கிய காரணமாக வயிற்றுப்போக்கு இருக்கிறது. எனவே அதனைத் தடுக்கும் வகையில் ஓஆர்எஸ் பவுடர்கள் ரூ.1.25 கோடி செலவில், 40 லட்சம் பாக்கெட்டுகள் தமிழ்நாடு முழுவதும் விநியோகிக்கப்படுகிறது. ரூ.1.68 லட்சம் மதிப்பிலான ஜின்க் மாத்திரைகளும் வழங்கப்பட இருக்கிறது. இதன் மூலம் தமிழ்நாட்டில் 58 லட்சத்து 33 ஆயிரம் குழந்தைகள் பயன் பெற இருக்கின்றனர்.
அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் ஒவ்வொரு வீட்டிற்கும் 2 பொட்டலங்களும், 14 ஜிங்க் மாத்திரைகளும் வழங்கப்படுகிறது. மேலும், ஒரு மாதம் காலம் சுத்தம் மற்றும் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்ச்சியாக நடைபெற உள்ளது. கை கழுவுதல் குறித்த செயல் விளக்கமும் ஏற்படுத்தப்படும்.
வயிற்றுப்போக்கு நிற்கும் வரை ஓஆர்எஸ் மருந்தை தொடர்ச்சியாக அளிக்க வேண்டும். இந்த மாத்திரைகளை தண்ணீரில் அல்லது தாய்ப்பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். இந்தியாவைப் பொறுத்தவரை 17.1 சதவீதம் வைட்டமின் ஏ குறைபாட்டினால் பார்வை இழப்பு இருந்து வருகிறது.
தமிழ்நாட்டைப் பொருத்தவரை 7 சதவிகிதம் பார்வை இழப்பு ஏற்படுகிறது. இதற்காக பொது சுகாதாரத்துறை சார்பில் வைட்டமின் ஏ உள்ள மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த முகாம் ஒரு மாத காலத்திற்கு நடைபெறும். இதில், 52 லட்சத்து 73 ஆயிரம் வைட்டமின் ஏ மாத்திரைகள் வழங்கப்படும்.
சைதை கன்னிகாபுரம் பகுதியில் வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் 2024 மற்றும் வைட்டமின் ஏ முகாம் தொடங்கி வைக்கப்பட்டது. #Masubramanian #TNHealthminister #DMK4TN pic.twitter.com/qcvyXeIiUe
— Subramanian.Ma (@Subramanian_ma) July 1, 2024
சைதாப்பேட்டை சிறுவன் உயிரிழப்பு: சைதாப்பேட்டையில் சிறுவன் இறப்பில் தவறான புரிதல் இருக்கிறது. அந்தப் பகுதியில் 2500 பேர் வசிக்கின்றனர். அப்படி குடிநீரில் பாதிப்பு இருந்தால் அனைவருக்கும் வயிற்றுப்போக்கு வந்திருக்க வேண்டும். கடந்த 10 நாட்களுக்கு முன்னர் குடிநீரில் கழிவுநீர் கலந்திருப்பதாக புகார் வந்தது. அதனை சரிசெய்யும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். குடிநீர் மேலாண்மை இயக்குனர் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்.
குடிநீர் வரும்பொழுது ஆரம்பத்தில் தெளிவாக வந்தாலும் முடிவில் சிறிது கலங்களோடு வருவதாக பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். அந்த கலங்கள் குழாய் உள்ளே இருக்கும் கலங்கல்கள் தான் அப்படி வந்துள்ளது. ஆனாலும் இதனால் அந்த பாதிப்பு ஏற்படவில்லை. இருந்தாலும் சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று யாருக்காவது பாதிப்பு இருக்கின்றதா? என விசாரித்து வருகின்றனர்.
சைதாப்பேட்டையில் இறந்த குழந்தை எழும்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்படவில்லை. அந்தக் குழந்தை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப்பலனின்றி இறந்துள்ளார். அந்தக் குழந்தையின் தங்கை தான் எழும்பிற்கு சிகிச்சைக்கு சென்றார். இவர்கள் பீகாரிலிருந்து வந்தவர்கள் என்பதால் ஆயிரம் ரூபாய் கட்ட சொல்லி உள்ளனர்.
இதை இரண்டாயிரம் எங்களுக்கு லஞ்சமாக கேட்டார்கள் என்று புரிந்து கொண்டனர். இந்தியா முழுக்க உள்ள அனைத்து மாநிலங்களிலிருந்தும், அண்டை மாநிலங்களிலிருந்தும் மருத்துவத்திற்கு வந்தால் அவர்களிடம் குறைந்தபட்ச தொகை வாங்குவது இயல்பு தான். மாநிலங்களில் உள்ள வழக்கம்.
அதன்படியே அவர்களிடமும் பரிசோதனையை செய்வதற்காக ஆயிரம் ரூபாய் கட்டச் சொல்லி உள்ளனர். அதனை தவறாகப் புரிந்துகொண்டு அரசியல்வாதிகள் கூறுகின்றனர். அதிமுக ஆட்சியிலும் இந்த நடைமுறை இருந்து வந்தது.
’இன்னுயிர் காப்போம்' திட்டத்தின் மூலம் வெளி மாநிலங்களை சேர்ந்தவர்களும் தமிழ்நாட்டில் விபத்து ஏற்பட்டால் 24 மணி நேரத்திற்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதேபோல் சுகாதாரத்துறை மூலமாக வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கும், அரசு மருத்துவமனைகளில் இலவசமாக மருத்துவம் தர வேண்டும் என்ற கோரிக்கையை முதலமைச்சரிடம் வைத்துள்ளோம்.
உலக வங்கியில் கடன் வாங்கப்பட்டு மருத்துவத்துறையில் மருத்துவமனைகள் கட்டடங்கள் கட்டப்பட்டு அதற்கான பணிகள் முடிந்துள்ளது. தற்பொழுது அமெரிக்கா வாஷிங்டனில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு சென்று அவர்களைச் சந்தித்து கடன் கேட்க உள்ளோம்.
ஹார்ட்வேர்ட் பல்கலைக்கழகத்தில் மக்களை தேடி மருத்துவம் இன்னுயிர் காப்போம் என்ற தலைப்பில் பேச இருக்கிறேன். அதில், தமிழ்நாட்டின் சார்பில் தமிழ்நாட்டில் செய்யப்பட்ட திட்டங்களை குறித்து விளக்க உரையை ஆற்றுவதற்கு அங்கு கிடைத்த ஒரு வாய்ப்பை தமிழகத்துக்கு பெருமை அளிக்கிறது.
ஜான் ஹாப்கின்ஸ் மற்றும் ஹார்வர்ட் பல்கலைக்கழகம், தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக் கழகத்திற்கும் இடையே மாணவர்கள் பரிமாற்றம் திட்டத்தின் கீ்ழ் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய உள்ளோம். இதனால் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு அங்கு சென்று அவர்களின் மருத்துவ செயல்முறைகளை குறித்து கற்றுக்கொள்ளலாம்.
நீட் தேர்வு: நீட் தேர்வில் முறைகேடு குறித்து பீகாரில் சிபிஐ விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விரைவில் அதற்கு ஒரு விடை கிடைக்கும். தற்போதைய மத்திய உயர்கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை நாங்கள் சந்திக்கும்போது ஒடிசாவிலும் நீட் தேர்விற்கு எதிர்ப்பு உள்ளதாக தெரிவித்தார். தமிழ்நாட்டில் எந்த அளவிற்கு நீட் எதிர்ப்பு இருக்கிறதோ, அதேபோன்று ஒடிசாவிலும் இருக்கிறது என்றார். ஆகவே நீட் எதிர்ப்பு என்பது இந்தியா முழுவதும் இருக்கிறது.
நீட் தேர்வில் மதிப்பெண்கள் வழங்கியதில் பல்வேறு குளறுபடிகள் நடைபெற்றுள்ளது குறித்த கேள்விக்கு, "உச்சநீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. அதனை முதலில் தமிழ்நாடு தான் தெரிவித்தது. மருத்துவ மாணவர் சேர்க்கை குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ளதால், தீர்ப்பிற்குப் பின் முடிவெடுக்கப்படும்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: "டாஸ்மாக் சரக்கில் கிக் இல்லை என்று சொன்ன அமைச்சர் துரைமுருகனுக்கு நன்றி" - ஹெச்.ராஜா கிண்டல்! - h raja