சென்னை: பெண் போலீசாரை அவதூறாகப் பேசியதாக கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவை ரத்து செய்யக்கோரி அவரது தாய் கமலா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு எதிராக மக்களை போராட தூண்டியுள்ளார். அரசுக்கு எதிராக தொடர்ந்து அவதூறான கருத்துக்களை பரப்பி வந்தார் என வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சவுக்கு சங்கரின் கருத்தால் பொது அமைதிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. மேலும், தவறான தகவல்களின் அடிப்படையில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளார்” என தெரிவித்தார்.
இதையடுத்து அரசு தரப்பில், “அனைத்து பெண் காவலர்கள் குறித்தும் சவுக்கு சங்கர் தவறாக கருத்து தெரிவித்துள்ளார். சவுக்கு சங்கர் அரசுக்கு எதிராக அவதூறாக பேசக்கூடாது என கடந்த ஆண்டு முதல் கூறப்பட்டு வருகிறது. ஆனாலும், தொடர்ந்து அரசுக்கு எதிராக பேசியதால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது" என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், “யூடியூப்களில் கருத்து தெரிவிக்கும் அனைவரும் கைது செய்யப்படுகிறார்களா? இதுவரை எத்தனை பேர் தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்? வீடியோ வெளியிட்டதால், மக்கள் பாதிக்கப்பட்டார்கள் என எதன் அடிப்படையில் அரசு முடிவுக்கு வந்தது?
யூடியூப்களில் வெளியிடப்படும் கருத்துக்களை நம்புவது மக்களின் தனிப்பட்ட விருப்பம். அது சரியாக இருந்தால் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். நல்ல எண்ணம் கொண்டவர்கள் நல்ல வீடியோக்களை பார்ப்பார்கள். தீய எண்ணம் கொண்டவர்கள் தீய வீடியோக்களை பார்ப்பார்கள். அதனால், எந்த வீடியோவை பார்க்க வேண்டும் என யாரையும் கட்டாயப்படுத்த முடியாது.
தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் செய்திகள் அனைத்தும் உண்மையா? திரைப்படங்களில் ஏன் அரிவாள் கத்திகளுடன் காட்சிகள் இடம்பெறுகின்றன? சமுதாயத்திற்கு தேவையான தத்துவத்தையா காட்சிப் படுத்துகின்றன?
அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கும் நீதிபதிகளை உயர்வாக பேசுவதும், எதிராக தீர்ப்பு வழங்கும் நீதிபதியை அவதூறாக பேசுவதும் வாடிக்கையானது. அதற்காக நடவடிக்கை எடுக்க முடியாது. அனைவருமே சமூக வளைதளங்களில் தவறாக பேசக்கூடாது என அறிவுறுத்த மட்டுமே முடியும். யாருடைய பேச்சு சுதந்திரத்திலும் தலையிட முடியாது.
தமிழகத்தில் பணிபுரியும் 25 ஆயிரம் பெண் காவலர்களும் சவுக்கு சங்கருக்கு எதிராக புகார் அளித்துள்ளார்களா? அரசுக்கு எதிரான வீடியோக்களை மக்கள் பார்க்கிறார்கள் என்றால் ஊழல் அதிகரித்துள்ளது என அர்த்தம். அரசு அலுவலகங்களில் ஊழல் என்பது இல்லையா? மக்களுக்கு எது உண்மை என்பது தெரியும். யாரும் அவர்களுக்கு சொல்லி தர வேண்டிய அவசியம் இல்லை.
சவுக்கு சங்கருக்கு யார் தகவல்கள் கொடுக்கிறார்கள். அதை ஏன் விசாரணை செய்யவில்லை. அரசுக்கு எதிரான ஆதாரங்களை தருபவர்களை கைது செய்யுங்கள். ஆங்கிலேயர்கள் காலத்தில் கொண்டு வரப்பட்ட தடுப்புக் காவல் சட்டத்தை தற்போது பயன்படுத்தினால் அது நம்மை ஆங்கிலேயர் ஆட்சிக்குக் கொண்டு செல்லும் என கருத்த தெரிவித்த நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: விமான நிலையத்தில் தவிக்கும் கேன்சர் நோயாளி.. வங்கதேச தம்பதிக்கு நேர்ந்த சோதனை! - 2 people suffering chennai airport