சென்னை: சென்னையில் கடந்த 2023ஆம் ஆண்டு நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய சபாநாயகர் அப்பாவு, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு 40 அதிமுக எம்எல்ஏக்கள் திமுகவில் இணைய தயாராக இருந்ததாகவும், அதை ஏற்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மறுத்து விட்டதாகவும் கூறியிருந்தார்.
அதிமுகவின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாக சபாநாயகருக்கு எதிராக, அதிமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் பாபு முருகவேல் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு கோப்புக்கு எடுக்கப்படாததை அடுத்து, பாபு முருகவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், பாபு முருகவேலின் வழக்கை கோப்புக்கு எடுத்துக் கொண்டு சட்டப்படி நடவடிக்கையை தொடரும்படி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.
இதனையடுத்து, இந்த வழக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் என்ற முறையில் பாபு முருகவேல் சாட்சிக் கூண்டில் ஏறி வாக்குமூலம் அளித்தார். இதனையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றிய நீதிபதி, விசாரணையை ஆகஸ்ட் 7ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
![ஈடிவி பாரத் தமிழ்நாடு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/31-07-2024/22097343_whatsup.jpg)
இதையும் படிங்க: சபாநாயகர் அப்பாவு மீதான கிரிமினல் அவதூறு வழக்கு: 2 வாரத்தில் உத்தரவு பிறப்பிக்க உயர்நீதிமன்றம் ஆணை - SPEAKER APPAVU HIGH COURT CASE