தேனி: தேனி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்தவர் மனோகரன். லாரி ஓட்டுநராக உள்ள இவரது மகள் மனிஷாவிற்கு, போலீசாக உள்ள கருநாக்கமுத்தன்பட்டியைச் சேர்ந்த உதயகுமார் என்பவர் உடன் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. தற்போது இருவருக்கும் 2 குழந்தைகள் உள்ள நிலையில், தம்பதியிக்கு இடையே அடிக்கடி சண்டை வருவதாகக் கூறப்படுகிறது.
அதனால், இருவரும் அடிக்கடி பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். கடந்த 8 மாதங்களுக்கு முன்னர், உதயகுமார், மனைவி மனிஷா உட்பட குழந்தைகளுக்கு தேநீரில் பேதி மாத்திரை எனக் கூறப்படும் ஒரு வித மாத்திரையைக் கலந்து கொடுத்ததால் வீட்டில் சண்டை வந்துள்ளது. அதையடுத்து, தகராறு பெரிய அளவில் மாறிய நிலையில் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
தற்போது, முதல் குழந்தையை மனிஷா போலீசார் மூலமாகப் பெற்று வளர்த்து வருகிறார். இதற்கிடையே, தனது 2 வயது குழந்தையையும் ஒப்படைக்கக் கோரி, கடந்த ஒரு ஆண்டாகப் போராடி வருவதாகத் தெரிவிக்கிறார். போலீசார் நடவடிக்கை எடுக்காததாகக் கூறும் மனிஷா, இன்று தேனி மாவட்டம் உத்தமபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தனது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
பின்னர், அப்பெண்ணிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய போது மனிஷா கூறியதாவது, “எனது குழந்தையை என்னிடம் ஒப்படைக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் குழந்தை உயிருடன் உள்ளது என்ற எழுத்துப்பூர்வமான வாக்குமூலம் வேண்டும்” என்று கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். பின்னர், போலீசார் அவரை சமாதானப்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
இதற்கிடையே பாதிக்கப்பட்ட பெண் மனிஷா செய்தியாளர்களிடம் கூறுகையில், “எனது குழந்தையைக் கேட்டு போலீசாரிடம் பலமுறை புகார் அளித்துள்ளோம். ஆனால், குழந்தையைக் கொடுக்காமல், காவல் நிலையத்திற்கும் நீதிமன்றத்திற்கும் அலைக்கழிக்கின்றனர். ஏற்கனவே, எனது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை. குழந்தை உயிரோடு உள்ளதா என்று கூடத் தெரியவில்லை. ஆகையால், தற்போது குழந்தையை வாங்காமல் இங்கிருந்து செல்லமாட்டோம். இந்த தர்ணா போராட்டம் முடிவடையாது" எனத் தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்