கோயம்புத்தூர்: கோவை சித்ரா பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் வைத்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கொங்கு மண்டல ஆலோசனைக் கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கலந்துகொண்டார். நிகழ்ச்சியைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர், "திருச்சியில் நடைபெறும் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா நிகழ்ச்சி தொடர்பாக தென் மண்டலத்தை தொடர்ந்து, கொங்கு மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கோவையில் இன்று நடைபெற்றது. காமராஜர் விழாவை சிறப்பிக்க அனைவரும் பங்கேற்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகள் வெடி விபத்தும், உயிரிழப்பும் தொடர் கதையாக உள்ளது. அரசு இதுபோன்று நிகழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் பூரண மதுவிலக்கு வேண்டும் என தமாக சார்பில் பல போராட்டங்கள், ஆர்ப்பாட்டம் நடக்தியுள்ளோம்.
ஆனால், தமிழக அரசின் மெத்தனப்போக்கால் கள்ளச்சாராயத்தால் 60க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத அரசாக இது உள்ளது. சாராயக்கடைகளை மூடுவது சாத்தியமில்லை என கூறுவது வாக்களித்த மக்களுக்கு செய்யும் துரோகம்.
இதுகுறித்து அமைச்சர் சபை நாகரிகம் இல்லாமல் பேசியுள்ளார். டாஸ்மாக் கடைகளை குறைக்கும் எண்ணமில்லை என கூறுவதும், ஏழை எளிய மக்கள் இதில் சிக்கி உயிரிழப்பதும் வேதனையாக உள்ளது. இதை கண்டுகொள்ளாமல் அபராதம், சிறையிலடைப்பு என அரசு சொல்வது, செயல் வடிவிலும் இருக்க வேண்டும். இதில் சிபிஐ விசாரணை வைத்திருக்க வேண்டும். அரசு ஏன் சிபிஐக்கு பயப்படுகிறது?" என விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "நீட் விவகாரத்தில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்பதற்காக, நீட் தேர்வே நடக்கக்கூடாது என்ற நோக்கில் இந்தியா கூட்டணியை தூண்டிவிடுவது என்பது சீப்பை ஒழித்து வைத்தால் திருமணம் நடக்காது என்பது போல் உள்ளது.
நீட் தேர்வில் முறைகேடு நடைந்திருப்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்ட மத்திய அமைச்சர், அதை விசாரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதோடு, தவறுகள் நடக்காமல் இருக்க ஆலோசனை செய்து விதி வகுக்க உயர்மட்டக் குழுவை அமைத்துள்ளளார். வெளிநாட்டு மாணவர்களுக்கு சவால் விடும் அளவிற்கு நமது மாணவர்கள் வளர்ந்து வரும் நிலையில், இதில் திமுக, காங்கிரஸ் ஆகிய எதிர்கட்சிகள் கல்வியில் அரசியல் செய்து வருகின்றனர்.
நீட் தேர்வு தேர்ச்சியில் நாம் வளர்ந்து வரும் சூழலில், இதில் அரசியலை புகுத்தி மாணவர்களையும், பெற்றோரையும் குழப்ப நிலைக்கு ஆளாக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். தமிழகத்தில் சட்டவிரோத சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. டாஸ்மாக் வருமானத்தில் தான் அரசே நடந்து கொண்டிருக்கிறது.
போதைப்பொருள் நடமாட்டம் சட்டம் ஒழுங்கை சீர்கெட வைக்கிறது. இதை தடுக்காத அரசு, எப்படி கள்ளச்சாரயத்தை ஒழிக்கும் என கேள்வி எழுந்துள்ளது. பூரண மதுவிலக்கிற்கான ஆலோசனைகளை அரசு செய்ய வேண்டும். கண்மூடித்தனமாக டாஸ்மாக் கடைக்கு ஆதரவாக பேசுவது அரசுக்கு வாடிக்கையாகி வருகிறது" எனக் கூறினார்.
இதையும் படிங்க: டாஸ்மாக் சரக்கில் ‘கிக்’ இல்லை என கூறுவது உண்மை.. அண்ணாமலை பேச்சு!