சென்னை: திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி கடந்த 2021 ஆம் ஆண்டு பேசிய கருத்து சர்ச்சைக்குள்ளானது. நடிகர் விஜய் சேதுபதி, பசும்பொன் முத்துராமலிங்க தேவரை பற்றி தவறாக பேசியதாக தனது முகநூல் பக்கத்தில் இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பதிவிட்டு இருந்தார்.
மேலும், "தேவர் ஐயாவை இழிவு படுத்திய நடிகர் விஜய் சேதுபதியை, உதைப்பவருக்கு ரொக்கப் பரிசாக ரூபாய் 1001 வழங்கப்படும்" என்றும் பதிவிட்டிருந்தார்.இந்நிலையில், அர்ஜுன் சம்பத்தின் இந்த சமூக வலைத்தள பதிவு தொடர்பாக கடந்த 17.11.2021 அன்று பெரிய கடைவீதி காவல் நிலையத்தில் இந்திய தண்டனை சட்டம் 504 & 506 (I) பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கில் 2023 -ஆம் ஆண்டு நவம்பர் 27-ஆம் தேதி குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில், நீதிபதி சந்தோஷ் முன்பு ஆஜரான அர்ஜுன் சம்பத், தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இந்நிலையில் அவருக்கு தண்டணையாக ரூ.4,000 அபராதம் விதித்து நீதிபதி சந்தோஷ் உத்திரவிட்டார். இதனையடுத்து தண்டனை விதிக்கப்பட்ட அர்ஜுன் சம்பத், அபராதத்தினை நீதிமன்றத்தில் செலுத்தினார்.
இதையும் படிங்க: ஒரே பிரச்சனைக்கு இரு தரப்பும் புகார் அளித்தால் தீர்வு காண்பது எப்படி? - விதிமுறை வகுத்த உயர்நீதிமன்றம்!