சென்னை: தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நடத்தை விதிகளில், அரசு ஊழியர்கள் அரசியல் கட்சிகளில் உறுப்பினராக இருக்கக் கூடாது எனவும், தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடக் கூடாது எனவும் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்ட போது, இந்த விதிகளை மீறி, அமைச்சர் பொன்முடியின் உதவியாளராக பணியாற்றி வந்த அரசு ஊழியரான சோமஸ்கந்தன் என்பவர், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி, லோக் ஜனசக்தி கட்சியின் மாநில பொதுச்செயலாளர் செல்வபாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, பணி சம்பந்தமான இந்த விவகாரம் எப்படி பொது நல வழக்காகக் கருத முடியும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆஜராக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, வழக்கின் விசாரணையை ஜூன் 27ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.