சென்னை: பொங்கல் பண்டிகைக்கு வெளியூர் செல்பவர்களின் வசதியை கருத்தில் கொண்டு, சென்னை புத்தகக் கண்காட்சி வரும் ஆண்டுகளில் டிசம்பர் மாதம் முதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தென்னிந்திய புத்தக பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர் சங்கம் அறிவித்துள்ளது.
இது குறித்து தென்னிந்திய புத்தக பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர் சங்கத்தின் (BAPASI – பபாசி) தலைவர் சேது.சொக்கலிங்கம் மற்றும் செயலாளர் முருகன் கூறியதாவது, "முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூல்களில் சங்க இலக்கியம், உலகப் பொதுமறை நூல்களான திருக்குறள், சரித்திர நாவல்கள், சமூக நாவல்கள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் அரசியல் உள்ளிட்ட எண்ணற்றப் படைப்புகளை படைத்துள்ளார். அவரின் படைப்புகள் அனைத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாட்டுடமையாக்கியுள்ளார்.
தென்னிந்திய புத்தக பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்தின் சார்பில், புத்தகப் பூங்காவை துவக்கி வைப்பது குறித்தும், பொது நூலகத் துறைக்கு புத்தகங்களை வாங்க வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் வைத்துள்ளோம். புத்தகம் தயாரிப்பதற்கான செலவுகள் உயர்ந்திருந்தாலும், வாசகர்களுக்கு குறைந்த விலையில் புத்தகங்களை விற்பனை செய்து வருகிறோம்.
புத்தகக் கண்காட்சிகள் மாவட்டங்களில் நடத்துவதால், சென்னை புத்தகக் கண்காட்சிக்கு பாதிப்பு ஏற்படவில்லை. மேலும், சென்னையில் ஜனவரி மாதத்தில் நடத்தப்பட்டு வந்த புத்தகக் கண்காட்சி இனி டிசம்பர் மாதத்தில் நடத்த திட்டமிட்டுள்ளோம். அதன்படி, இந்த ஆண்டு முதல் டிசம்பர் இரண்டாவது வாரத்தில் சென்னை புத்தகக் கண்காட்சி தொடங்கப்படும்.
பொங்கல் காலங்களில் வெளியூர் செல்லும் மக்கள் புத்தகக் கண்காட்சியில் புத்தகங்களை வாங்க முடியவில்லை என்று கூறுகின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு நடப்பு ஆண்டு முதல் டிசம்பர் மாதம் முதல் புத்தகக் கண்காட்சி தொடங்கப்படும். கடந்தாண்டு நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் ஒரு நாள் மழையின் போது மூட வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே, டிசம்பர் இரண்டாவது வாரம் தொடங்கி, ஜனவரி முதல் வாரம் வரை புத்தகக் கண்காட்சி நடத்த பரிசிலீத்து வருகிறோம்” இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: திருச்செங்கோடு சிறுமி கொலை; உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!