சென்னை: கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தின் விவேகானந்தர் அரங்கில் 2 நாட்கள் நடைபெற உள்ள இரண்டாம் உலகத் தமிழ் வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மாநாட்டின் துவக்க நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழ்நாடு அமைச்சர்கள் பொன்முடி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ரகுபதி, செஞ்சி மஸ்தாஸ் ஆகியோர் கலந்துக் கொண்டு மாநாட்டு மலரை வெளியிட்டு துவக்கி வைத்தனர்.
அதனைத்தொடர்ந்து, மாநாட்டில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “கல்வி நிறுவனங்களில் தமிழ் என்று சொல்லும் போது, மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, பணிகளில் சேர தகுதி வாய்ந்த, பள்ளி படிப்பை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீதம் ஒதுக்கீடு உள்ளது என்று கூறினார். அனைத்து பள்ளியிலும் மனோன்மணியம் சுந்தரனார் இயற்றிய தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை பாட வைத்தார்.
தமிழ் இலக்கிய திறனறித் தேர்வு நடத்தி இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் ரூ. 1500 வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்துள்ளார். தமிழ் மொழிப் பெயர்ப்பு செய்ய ரூ.3 கோடி வரை முதலமைச்சர் முக ஸ்டாலின் ஒதுக்கியுள்ளார். தமிழில் உள்ள பெருமைகளை உலகம் முழுதும் கொண்டு செல்ல, பன்னாட்டு புத்தகக் கண்காட்சி நடத்தி பல மொழிகளில், பல நாடுகள் மொழி பெயர்ப்பு செய்ய ஒப்புதல் அளித்து தமிழின் பெருமையை கொண்டு சேர்க்க செயல்பட்டு வருகிறோம்.
தனியார் பள்ளிகளில் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை தமிழ் கட்டாயப் பாடமாக இருக்க வேண்டும் என்று அதை சாத்தியப்படுத்தி உள்ளோம். இத்தனை ஆண்டுகள் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்த புத்தாக்கப் பயிற்சி, தற்போது சி.பி.எஸ்.சி உள்ளிட்ட தனியார் பள்ளி தமிழ் ஆசிரியர்கள் 25 ஆயிரம் பேருக்கு தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் இந்த ஆண்டு வழங்கப்பட்டது.
நீதிக்கட்சிக் காலத்தில் 1918 ல் தமிழ் மொழிக்கு செம்மொழி என்று வர வேண்டும் என்று சொல்லப்பட்டது. அதற்கான அந்தஸ்தை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெற்றுத் தந்தார். இந்த மொழி மாநாட்டில் பேசும் பொருட்களை, அந்தந்த துறைகளில் எப்படி கொண்டு செல்லலாம் என்று ஆலோசித்து செயல்படுத்த முயற்சி செய்வோம்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: சுதந்திர தினவிழாவில் தேசிய கொடி ஏற்றுவதை தடுத்தால் குண்டர் சட்டம் பாயும் - நீதிபதி எச்சரிக்கை