கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவபர்களை அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும், மருத்துவமனைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் தொடர்பான விவரங்களையும் கேட்டறிந்தார்.
அதனை தொடர்ந்து, கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "கள்ளச்சாராயம் விற்பனை நடந்த பகுதிக்கு அருகே நீதிமன்றம், காவல் நிலையம் இருக்கிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் இருக்கிறது.
இவ்வுளவு அரசு அலுவலகங்கள் இருக்கும் முக்கியமான பகுதிகளிலேயே கள்ளச்சார விற்பனை நடந்துள்ளதாக தகவல் வந்துள்ளது. முறையான கண்காணிப்பின்மை காரணமாக 35 பேர் இறந்துள்ளனர். இது மிகவும் வேதனையாக இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்கிற செய்தி கேட்டு மிகவும் வருத்தம் அடைந்தேன்.
நேற்று முதல் தற்போது வரை 200 பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டதாக செய்திகளில் கண்டேன்
நேற்று மதியம் வரை 3 பேர் பலி என செய்தி வந்த நிலையில், அடுத்தடுத்து கிடைத்த தகவல்கள் மிகவும்
அதிர்ச்சியை தந்துள்ளது. அரசு அலுவலகங்கள் உள்ள பகுதியில் இவ்வுளவு மோசமாக கள்ளச்சாராய விற்பனை நடந்துள்ளது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
பின்னணியில் இருப்பது யார்?: இந்த கள்ளச்சாராய விற்பனைக்கு பின்னணியில் ஆளுங்கட்சியை சேர்ந்த அதிகார கும்பல் இருப்பதாக கூறப்படுகிறது. இவ்வுளவு துணிச்சலாக கள்ளச்சாராய விற்பனை நடக்க காரணம் என்ன? யார் இவர்களுக்கு உதவுகிறார்கள்? .ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் உதவியாக இருக்கிறார்கள் என்கிற செய்தி தற்போது வரை வருகிறது .
இதனால் மிகப்பெரிய மரண இழப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் 22 பேர் மரக்காணம் கள்ளச்சாராய விவகாரத்தில் உயிரிழந்தார்கள். அப்போதும் நான் கள்ளச்சாராயம் தமிழ்நாட்டில் விற்பனை செய்யப்டுவதாக கூறினேன். இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினேன்.
அப்போதே வழக்கு சிபிசிஐடி விசாரணை நடந்தபோதிலும், இன்று வரை எந்த கைதும் இல்லை, நடவடிக்கை இல்லை. இன்றும் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர், 5 நாட்களுக்கு முன்னதாகவே கள்ளக்குறிச்சி மாவட்ட கண்காணிப்பாளரை தொடர்பு கொண்டு கள்ளச்சாராய விற்பனையை தடுக்க அறிவுறுத்தினார். ஆனால் காவல்துறை அதிகாரி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மு.க ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும்: தமிழ்நாடு முழுவதும் போதைப்பொருள் விற்பனை அதிகரித்துள்ளது. ஏழை-எளிய மக்கள் கள்ளச்சாராயம் குடித்து பலியாகி இருக்கின்றனர். இந்த விசயத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பொறுப்பேற்று உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். மாவட்ட ஆட்சியர் கள்ளச்சாராய மரணத்தை வயிற்று வலி என கூறி அரசுக்கு முட்டுக்கொடுக்கிறார். உடனடியாக அவர் இடை நீக்கம் செய்யப்படுகிறார்.
திமுக அரசு விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் காண்பித்த அக்கறையை கள்ளக்குறிச்சிக்கு காண்பித்து இருக்கலாம். மருத்துவமனையில் தேவையான வசதிகளை அரசு ஏற்படுத்தவில்லை. மருந்துகளுக்கான கையிருப்பு வைத்திருக்கவில்லை. இதனால் உயிரிழப்பு அதிகரித்துள்ளது. மருத்துவரை கூட உரியமுறையில் நியமனம் செய்யவில்லை.
அதிமுக ஆட்சிக்காலத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம் அறிவிக்கப்பட்டு, மருத்துவமனை அமைத்து கொடுக்கப்பட்டது. ஒமேஸ் பிரசோல் (Omeprazole) என்ற அடிப்படையான மருந்துகள் கூட திமுக அரசு வாங்கி கையிருப்பு வைக்கவில்லை.
கல்விச் செலவை ஏற்கிறோம்: கள்ளச்சாராயம் விவகாரத்தில் பெற்றோரை இழந்த குடும்பத்துக்கு, அதிமுக சார்பில் மாதம் ரூ.5 ஆயிரம் உதவித்தொகை உட்பட பிற உதவிகளும் செய்யப்படும். பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விச் செலவை அதிமுக ஏற்கிறது" என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.