ETV Bharat / state

ஆடிப்பெருக்கு திருவிழா: தஞ்சை காவிரி ஆற்றங்கரை பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடிய மக்கள்! - AADI PERUKKU FESTIVAL - AADI PERUKKU FESTIVAL

Aadi perukku festivel: ஆடிப்பெருக்கு விழாவானது கும்பகோணம் மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் காவிரி மற்றும் அரசலாற்றங்கரைகளில் இன்று காலை முதல் வழக்கமான உற்சாகத்துடன் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆடிப்பெருக்கு திருவிழா கொண்டாட்டம்
ஆடிப்பெருக்கு திருவிழா கொண்டாட்டம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 3, 2024, 12:41 PM IST

தஞ்சாவூர்: தமிழர்கள் கொண்டாடி மகிழும் முக்கிய விழாக்களில் ஒன்றாகத் திகழப்படும் ஆடி 18ம் நாள் கொண்டாடப்படும் ஆடிப் பெருக்கு விழா தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் படுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இவ்வாண்டு ஆடி பெருக்கு விழாவை கொண்டாட காவிரியில் தண்ணீர் வருமா எனக் கடந்த வாரம் வரை தெரியாத நிலையில், தற்போது மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட நீர், நேற்று நள்ளிரவு கும்பகோணம் வந்தடைந்ததால் அப்பகுதி மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடிய மக்கள் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

இதனையடுத்து இன்று காலை முதல் இவ்விழாவினை கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள காவிரி மற்றும் அரசலாற்றங்கரைகளில், உள்ள பாலக்கரை டபீர் படித்துறை, பகவத்படித்துறை, சக்கரப்படித்துறை, மேலக்காவேரி படித்துறை, சோலையப்பன் தெரு இராஜேந்திரன் படித்துறை, அண்ணலக்ரஹாரம் படித்துறை, சுவாமிமலை படித்துறை உள்ளிட்ட பல்வேறு படித்துறைகளில் ஏராளமானோர் வாழையிலை போட்டு, விளக்கேற்றி வைத்து, சப்பரத்தட்டி வைத்து பூஜை நடத்தினர்.

அத்துடன் பூ, வெற்றிலை பாக்கு, தேங்காய், வாழைப்பழம், கொய்யா, மாம்பழம், விலாம்பழம், பேரிக்காய், நாவல் பழம் உள்ளிட்ட பல்வகை பழ வகைகளை வைத்தும் வணங்கினர். இதனுடன் காதோலை கருகமணி, ஊறவைத்த அரிசியில் எள்ளு, வெல்லம் கலந்து வைத்தும், மங்கல பொருட்களான மஞ்சள் நூல், தாலி கயிறு, மஞ்சள் கிழங்கு, சந்தனம், மஞ்சள், குங்குமம் வைத்து பூஜைகள் செய்து கன்னிப்பெண்கள் விரைவில் திருமணம் கைகூட வேண்டினர். மேலும் சுமங்கலி பெண்கள் தங்கள் கணவர் மற்றும் குடும்ப மேன்மைக்காகவும், புதுமண தம்பதியினர் தங்களது திருமண மாலைகளை ஆற்றில் விட்டு, புதிதாக தாலிப்பெருக்கி அணிந்து கொண்டும் தீபங்கள் ஏற்றி வழிபட்டனர்.

மேலும் அங்குள்ள நாகர் சிலைகளுக்கு மஞ்சள் குங்குமம் பூசி, மஞ்சளில் நனைத்த நூல்களைக் கட்டியும், உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். பூஜையின் நிறைவாக, பெண்கள் ஒருவருக்கு ஒருவர், மஞ்சள் நூல்களைக் கழுத்தில் ஒருவருக்கு ஒருவர் மாற்றி அணிவித்துக் கொண்டும், ஆண்களின் வலது கை மணிக்கட்டுகளில் கட்டிக் கொண்டும், இப்பண்டிகையினை வழக்கமான உற்சாகத்துடன் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர்.

இந்த விழாவினை குறித்துப் பேசிய மக்கள், "காலை 6 மணி முதல் இந்த விழாவினை கொண்டாடி வருவதாகவும், கடந்த வாரம் முதல் கும்பகோணம் காவிரி ஆற்றில் தண்ணீர் வருமா என்ற சந்தேகத்தில் இருந்ததாகவும், இதனையடுத்து தற்போது நன்றாகத் தண்ணீர் வந்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளதாகத் தெரிவித்தனர். விவசாயமும், மக்களும் செழிப்பாக இருக்க வேண்டி பிரார்த்தனை செய்ததாக கூறினர். மேலும் கும்பகோணத்திற்கு பெருமை சேர்க்கும் விழாக்களில் இந்த ஆடிப்பெருக்கு விழாவும் ஒன்று" எனத் தெரிவித்தனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: சென்னையில் ஆடிப்பெருக்கு திருவிழா: கிராமத்தையே கண் முன் நிறுத்திய மாணவிகள்!

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.