சென்னை: கடந்த 26ம் தேதி தமிழகத்தில் இருந்து 26 தமிழர்கள் குஜராத் மாநிலம் பாவ் நகருக்கு புனித யாத்திரை சென்று திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது, ஆற்றில் திடீர் வெள்ளம் ஏற்பட்டதால், தரை பாலத்தில் வெள்ளம் அதிகரித்தது. இதனால் தமிழர்கள் சென்ற சொகுசு பேருந்து தரை பாலத்தில் பாதியில் வெள்ளத்தில் சிக்கியது. எதிர்பாராத விதமாக 26 தமிழர்கள் குஜராத்தில் மலேஸ்ரீ ஆற்று வெள்ளத்தில் சிக்கிக்கொண்டனர்.
உடனடியாக மீட்பு படையினர் தன்னார்வலர்கள் ஆகியோர் உதவியுடன் பேருந்தின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு வேறு ஒரு வாகனத்தில் தமிழர்கள் ஏற்றப்பட்டனர். ஆனால், அந்த வாகனமும் தரைபாலத்தின் வெள்ளத்தில் சிக்கியது. இந்நிலையில், மீட்பு படையினர் தொடர் முயற்சியின் காரணமாக, 26 தமிழர்கள் அனைவரும் பத்திரமாக மீட்க்கப்பட்டு சமுதாய நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: "அமைச்சரவை மாற்றம்: பொன்முடிக்கு ஏமாற்றம்; வெந்து போய் இருக்கும் துரைமுருகன்" - பற்ற வைத்த அதிமுக முன்னாள் அமைச்சர்!
அதனை தொடர்ந்து, தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலத்துறை, குஜராத் மாநில நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து குஜராத் வெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்டுள்ள, 26 தமிழர்களும், பாவ் நகரில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான மருத்துவ வசதி, தங்குமிடம், உணவுகள் அளித்து பத்திரமாக ரயில் மூலம் சென்னை அனுப்பி வைத்தனர்.
ரயில் பயணம் மூலம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்த 26 தமிழர்களையும், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
பின்பு தமிழக அரசு சார்பில் வாகன வசதிகள் ஏற்பாடு செய்து அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.