கோவை: கோயம்புத்தூர் மாவட்டம் அவினாசி சாலையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் புச்சி பாபு கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று தொடங்கிய ஆட்டத்தில் தமிழ்நாடு லெவன் அணி - மும்பை அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற தமிழ்நாடு லெவன் அணியின் கேப்டன் சாய் கிஷோர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி தமிழ்நாடு லெவன் அணியில் அதிஷ் மற்றும் லோகேஷ்வர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் சேர்ந்து முதல் விக்கெட்டுக்கு 18 ரன்கள் எடுத்தனர். லோகேஷ்வர் 10 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் மற்றொரு தொடக்க வீரர் அதிஷ் தன் பங்குக்கு 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதன் பின் கூட்டணி அமைத்த பிரதோஷ் ரஞ்சன் பவுல் - பாபா இந்திரஜித் அணியை தங்களின் நிதான ஆட்டத்தின் மூலம் வழிநடத்திச் சென்றனர். இருவரும் அரைசதம் கடந்து தொடர்ந்து விளையாடி வந்தனர். நீண்ட நேரம் நீடித்த இந்த ஜோடியை மும்பை வீரர் தனுஷ் கோடியன் பிரித்தார்.
அவரது பந்துவீச்சில் பிரதோஷ் ரஞ்சன் பவுல் 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து பாபா இந்திரஜித்தும் தன் பங்குக்கு 61 ரன்கள் எடுத்து ஹிமன்சு சிங் பந்தில் போல்டாகி வெளியேறினார். இதனிடையே களமிறங்கிய பூபதி வைஷ்ன குமார் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவில் இருந்து மீட்டார்.
அவருக்கு உறுதுணையாக மொகித் ஹரிஹரன் (32 ரன்) விளையாடினார். முதல் நாள் முடிவில் தமிழ்நாடு லெவன் அணி 90 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 294 ரன்கள் குவித்தது. பூபதி வைஷ்ன குமார் 63 ரன்களும், சோனு யாதவ் 37 ரன்களும் எடுத்து அவுட்டாகாமல் களத்தில் உள்ளனர். முதல் நாளில் மும்பை வீரர்கள் தனுஷ் கோடியன், ஹிமன்சு சிங் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினர். ஷம்ஸ் முலானி 1 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து நாளை (ஆக.28) இரண்டாவது ஆட்டம் நடைபெற உள்ளது. தமிழக வீரர்கள் தொடர்ந்து விளையாட உள்ளனர்.
இதையும் படிங்க: WWE வீரர் புற்றுநோயால் மரணம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்! - WWE player dead