ஹைதராபாத்: தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜூன். இவரது நடிப்பில் கடந்த 5ம் தேதி புஷ்பா 2 திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி படமாக அமைந்தது. இப்படத்தின் சிறப்புக் காட்சி கடந்த 4ம் தேதி ஹைதராபாத் சந்தியா திரையரங்கில் காட்சிப்படுத்தப்பட்டது. இந்த காட்சிக்கு அல்லு அர்ஜூன் தனது குடும்பத்துடன் வருகை புரிந்தார்.
அப்போது, திரையரங்கிற்கு குடும்பத்துடன் படம் பார்க்க வந்த ரேவதி (35) மற்றும் அவரது மகன் ஸ்ரீதேஜா (9) அந்த கூட்டத்தில் சிக்கி, ரசிகர்களின் காலில் மிதிபட்டு மயக்கமடைந்தனர். அவர்களை காவல்துறையினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனைத்தொடர்ந்து ரேவதி என்பவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதற்கு அல்லு அர்ஜூன் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு 25 லட்சம் நஷ்டஈடு வழங்கியிருந்தார்.
இதனையடுத்து அப்பெண்ணின் குடும்பத்தார் அல்லு அர்ஜூன் மற்றும் சந்தியா தியேட்டர் நிர்வாகம் மீது கடந்த 11ஆம் தேதியன்று போலீசில் புகார் அளித்தனர். அப்புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டிருந்தனர். இதனைத்தொடர்ந்து இன்று (டிச.13) அல்லு அர்ஜூன் வழக்கறிஞர் நிரஞ்சன் ரெட்டி, ஹைதராபாத் நாம்பள்ளி நீதிமன்றத்தில் வழக்கை விசாரிக்கும்படி கோரிக்கை வைத்தார்.
இந்த விசாரணையை அடுத்து சிக்கட்பல்லி போலீசார் சந்தியா தியேட்டர், கூட்ட நெரிசலில் பெண் சிக்கி உயிரிழந்த வழக்கில், அல்லு அர்ஜூன் மற்றும் சந்தியா தியேட்டர் திரையரங்க உரிமையாளர் சந்தீப், மேலாளர் நாகராஜு, ஊழியர் விகய் சந்தர் ஆகியோர் மீது BNS 105 மற்றும் 118 ஆகிய பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இதையும் படிங்க : ’புஷ்பா 2’ சிறப்பு காட்சியில் பெண் உயிரிழந்த வழக்கு: அல்லு அர்ஜூனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்!
இந்த வழக்கை விசாரித்த நாம்பள்ளி நீதிமன்றம் அல்லு அர்ஜூனை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அல்லு அர்ஜூன் வழக்கறிஞர் இவ்வழக்கில் ஜாமீன் கோரி தெலங்கனா நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அல்லு அர்ஜூனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியும், அவரது நீதிமன்றக் காவலை ரத்து செய்தும் உத்தரவிட்டது.
I can’t believe what I am seeing right now..
— Rashmika Mandanna (@iamRashmika) December 13, 2024
The incident that happened was an unfortunate and deeply saddening incident.
However, it is disheartening to see everything being blamed on a single individual. This situation is both unbelievable and heartbreaking.
மேலும், "அல்லு அர்ஜூன் ஒரு நடிகர் என்பதால் அவரது உரிமையை பறிக்க முடியாது. அவர் குடிமகனாக வாழ்வதற்கும், சுதந்திரத்துக்கும் அவருக்கு உரிமை உண்டு" என நீதிமன்றம் கூறியது.
ராஷ்மிகா மந்தனா எக்ஸ் பதிவு : "என்னால் நம்ப முடியவில்லை. நடந்த சம்பவம் துரதிஷ்டவசமானதும், மிகுந்த வருத்தமளிப்பதும் ஆகும். இருப்பினும், எல்லாவற்றுக்கும் ஒரு தனி நபர் குற்றம் சாட்டப்படுவதைப் பார்ப்பது வருத்தமளிக்கிறது" என அல்லு அர்ஜூன் கைது குறித்து நடிகை ராஷ்மிகா மந்தனா எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.