சென்னை: பீப்புல் மீடியா ஃபேக்டரி - விஷ்வ பிரசாத் தயாரித்து இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடித்து கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியான படம் வடக்குப்பட்டி ராமசாமி. காமெடி படமாக வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி வருகிறது. இந்த நிலையில் வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வெற்றி விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேப்பில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் சந்தானம், நிழல்கள் ரவி, ரவி மரியா, எம்.எஸ் பாஸ்கர், கூல் சுரேஷ், சேஷூ, நடிகைகள் மேகா ஆகாஷ், ஜாக்லின், இயக்குநர் கார்த்திக் யோகி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி மேடையில் பேசிய நடிகர் நிழல்கள் ரவி, "ரவி சந்திரகாந்த் (ஆர்.சி) ஆக இருந்த என்னை மேஜர் சந்திரகாந்தாக (எம்.சி) ஆக மாற்றிய பெருமை இயக்குநரை சேரும். நான் சினிமாவுக்கு வந்து கிட்டத்தட்ட 40 வருடமாகி விட்டது.
ஒரு நடிகருக்கு படம் வெற்றி பெற்றால் 10 வருடமாகும். நிழல்கள் படத்தில் துவங்கிய பயணம் தற்போது வடக்குப்பட்டி ராமசாமி வரை தொடர்கிறது. இயக்குநர் என்னை பார்த்து, மேஜர் சந்திரகாந்த் கதாபாத்திரம் மூலம் காமெடியை பண்ண வைத்தார். சந்தானம் காமெடியை பார்த்து ரொம்ப சந்தோஷப்பட்டிருக்கிறேன். அவருடன் நடிக்க வேண்டும் என்ற ரொம்ப நாள் ஆசை இந்த படத்தில் நிறைவேறியது. நான் முதன் முதலில் காமெடி ரோல் பண்ணிருக்கேன். படக்குழுவினருக்கு நன்றி" எனத் தெரிவித்தார்.
அவரைத் தொடர்ந்து பேசிய நடிகர் எம்.எஸ் பாஸ்கர், "இந்த மாதிரி வெற்றி விழாவில் கலந்து கொள்வது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. ஒரு படம் நடிக்கும் போது, ஓவர் லைட் வெளிச்சம் காரணமாக கண் திறக்க முடியவில்லை. பார்க்கிங் படத்தின் ஷூட்டிங்கில் இந்த படத்தின் கதையை இயக்குநர் சொன்னார். இந்த படத்தில் மாற்று திறனாளியாக நடித்தேன். எல்லா படத்திலும் அண்ணன் இருக்க வேண்டும் என ஆசைப்படுபவர் சந்தானம். என் மீது மிகுந்த அக்கறை கொண்டவர். 100-வது நாள் விழாவும் இந்த படத்திற்கு வர வேண்டும் என்று இறைவனை வேண்டி கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.
நிகழ்ச்சி மேடையில் பேசிய நடிகர் கூல் சுரேஷ், "நீங்களே கை தட்டுங்கள். இன்றைக்கு இந்த படம் ஹிட்டாக காரணம் நீங்கள் தான். வடக்குப்பட்டி ராமசாமி படத்துக்கு நல்ல விமர்சனம் கொடுத்தீங்க. நான் நடித்த படங்கள், சினிமாக்காரர்கள் நிறைய பேர் படம் பார்த்து நன்றாக நடித்தீர்கள் என்று பாராட்டினர். ரஜினி, கமல், விஜய், அஜித் யாராக இருந்தாலும் இயக்குநர் தான் வெளியே கொண்டு வர வேண்டும் எனவும், இந்த படத்தில் என்னை இயக்குநர் நல்ல கதாபாத்திரத்தின் மூலம் வெளிக்கொண்டு வந்துள்ளார்.
இந்த கண்ணாடிக்கு சொந்தக்காரர் சந்தானம் தான். இது தான் உண்மையான நட்பு. தியேட்டர்களில் போய் கத்துறேன் என்று நிறைய பேர் சொல்கிறார்கள். நம்மை அறியாமல் சொல்வது தான் அது. ரசிகர்கள் என் மீது வைத்த பாசத்தில் என்னை அறியாமல் சொல்வது தான். பிக்பாஸ்-க்கு பிறகு என்னை மாற்றி கொண்டு தான் வருகிறேன்.
சில விஷயங்களை மாற்ற முடியவில்லை. ரவி மரியா என் கண்ணுக்கு பேராசிரியர் மாதிரி தெரிகிறார். ரொம்ப அட்வைஸ் பண்ணுவார். படக்குழுவினருக்கு நன்றி. சிம்பு, தனுஷ் உடன் நடித்த மேகா ஆகாஷ். தற்போது சந்தானத்துடன் நடிக்கிறார். இசை வெளியீட்டு விழாவில் அவர் என்னுடன் போட்டோ எடுக்கனும்னு சொன்னதை என்னால் மறக்க முடியாது. அதை கல்வெட்டில் எழுதி வைத்து கொள்ளலாம்" என்று கூறி ஒரு பாடலையும் பாடினார்.
நிகழ்ச்சி மேடையில் பேசிய நடிகை மேகா ஆகாஷ், "ஷூட்டிங்கின் போது என் பாட்டி இறந்ததால் எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. நல்ல படம் பண்ணுவதை விட அது ரசிகர்களுக்கு பிடிக்கும் விதத்தில் இருக்க வேண்டும். இந்த படம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல்" என்று கூறினார்.
இதையும் படிங்க: நோ பொலிடிக்கல் கொஸ்டின்ஸ்.. லோகேஷுடன் இணையும் ரஜினிகாந்த்.. ரஜினியின் பளீச் பதில்!