சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜயின் 68வது படமாக உருவாகியுள்ள திரைப்படம் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்', செப்டம்பர் 5ஆம் தேதியான இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் விஜய் ரசிகர்கள் ஆட்டம், பாட்டம் என கொண்டாடி வருகின்றனர்.
ரூ.400 கோடிக்கு மேல் மிகப்பெரிய பொருட்செலவில் தயாராகியுள்ள கோட் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. விஜய்யுடன் இப்படத்தில் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, மீனாட்சி சவுத்ரி என பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். விநாயகர் சதுர்த்தியை வெளியாகியுள்ள இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
ரசிகர்கள் கொண்டாட்டம்: கோட் திரைப்பட சிறப்புக் காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான திரையரங்குகளில் காலை 9 மணிக்கு திரையிடப்பட்டது. ஆனால் தமிழகத்தில் படம் வெளியாவதற்கு முன்னரே அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடக, ஆந்திரா மற்றும் தெலங்கான உள்ளிட்ட மாநிலங்களில் அதிகாலை 4.30 மணிக்கே திரைப்படம் வெளியானது. இதனால் அதிகாலை முதலே ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதே போல் சென்னை காசி திரையரங்கில் ரசிகர்கள் ஆராவாரத்துடன் கொண்டாடி வருகின்றனர். பட்டாசு வெடித்தும் மேளம் அடித்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும் விஜய்யின் போஸ்டருக்கு பால் அபிஷேகம் செய்தும் நடனமாடியும் கொண்டாடினர்.
படம் தான் முக்கியம்: இந்த நிலையில் திருமணம் முதல் முறையாக மறு வீடு கூட செல்லாமல் கோட் திரைப்படம் பார்க்க வந்தது ஒரு ஜோடி. விஜய்யின் தீவிர ரசிகரான சதீஷ் நாமக்கல்லில் தனக்குத் திருமணம் முடிந்தவுடன் கோட் படம் பார்க்க தனது மனைவியுடன் சென்னை காசி திரையரங்கம் வந்தார்.
சைதாப்பேட்டை தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகியான இவர் இதுகுறித்து பேசியபோது, "சைதை கிழக்குப் பகுதி செயலாளராக உள்ளேன், எனக்கு திருமணம் ஆகி ஒரு வாரம் தான் ஆகிறது. முதல் படம் விஜய் படம் பார்க்க வேண்டும் என்பதற்காக இதற்கு முன் வெளியான எந்த திரைப்படத்தையும் நான் திரையரங்கிற்குச் சென்று பார்க்கவில்லை" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: விநாயகர் சிலையில் உருவான கோட் விஜய்.. ஓவிய ஆசிரியர் செல்வம் அசத்தல்!