ஹைதராபாத்: பிரபல கன்னட நடிகர் யாஷ் இயக்குநர் நிதேஷ் திவாரியின் ராமாயணம் இதிகாச திரைப்படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகவுள்ளார். இந்நிலையில் தனது இரண்டாவது பாலிவுட் படத்தில் நட்சத்திர நடிகர் ஷாருக்கானுடன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேஜிஎஃப்(KGF) திரைப்படம் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான நடிகர் யாஷ், ராமாயணம் கதையை தழுவி இயக்குநர் திவாரி இயக்கவுள்ள படத்தில் ராவணனாக நடிக்கவுள்ளார். மேலும் யாஷ் கேஜிஎஃப் திரைப்படம் மூலம் இந்தி திரையுலகில் பிரபலமடைந்ததால் பாலிவுட்டில் தடம் பதிக்க விரும்புவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், நடிகர் யாஷ் ராமாயணம் படத்தில் நடிக்க தயாராகி வரும் நிலையில், தனது இரண்டாவது பாலிவுட் படம் குறித்து இயக்குநர்களிடம் கதை கேட்டு வந்தார். அப்போது ரெட் சில்லீஸ் தயாரிப்பு நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. மேலும் இரண்டாவது படத்தில் ஷாருக்கானுடன் நடிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் நடிகர் யாஷும் ஷாருக்கானும் இணைந்து நடிக்க ஆர்வமுடன் உள்ளனர். ஆனால் இந்த தகவலில் உண்மை இல்லை எனவும், யாஷ் தற்போது நடித்து வரும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் எனவும் நடிகர் யாஷின் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. யாஷ் தற்போது கீது மோகன்தாஸ் இயக்கும் ‘TOXIC' படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் யாஷ் ராவணனாக நடிக்கும் படத்திற்கு 150 கோடி ரூபாய் சம்பளம் பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் ரன்பீர் கபூர் ராமனாகவும், சாய் பல்லவி சீதையாகவும் நடிக்கவுள்ளனர். நடிகர் யாஷ் தற்போது அவர் நடிக்கும் படங்களுக்கு 100 கோடி முதல் 150 கோடி வரை சம்பளம் பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நீதிமன்றத்தில் பொய் சொல்ல வேண்டாம் - நடிகர் இளவரசுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை!