சென்னை: தமிழ் திரைத்துறையில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித் குமார். இவரது படங்கள் வெளியாகும் நாளை ரசிகர்கள் தீபாவளி பண்டிகை போல் கொண்டாடுவது வழக்கம். இவரது நடிப்பில் கடைசியாகத் 'துணிவு' படம் வெளியானது. அதனைத் தொடர்ந்து ஒரு வருடத்திற்கு மேலாக எந்த படமும் வெளியாகவில்லை. இதனால் அவரது ரசிகர்கள் அஜித்தின் அடுத்த படத்துக்காக பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித்தின் அடுத்த படத்தில் நடிப்பதாக தகவல் வெளியானது. ஆனால் அது குறித்து எந்த அப்டேட்டும் இல்லை, அதன்பிறகு மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா தயாரிப்பில் 'விடாமுயற்சி' என்ற படத்தில் அஜித் நடிக்க ஒப்பந்தம் ஆனார். இப்படத்தின் படப்பிடிப்பு பல மாதங்களாக அசர்பைஜானில் நடந்து வருகிறது. இப்படத்தில் அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கான படப்பிடிப்பு நீண்ட நாட்களாக நடந்து வருவதால், அஜித் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கி விட்டார். வழக்கமாக ஒரு படத்தை முடித்துவிட்டுத் தான் அஜித் தனது புதிய படத்தைத் தொடங்குவார். ஆனால் இம்முறை 'விடாமுயற்சி' தாமதம் ஆவதால் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'குட் பேட் அக்லி' படத்தில் ஒப்பந்தமாகி அதன் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடந்து வருகிறது.
இந்த நிலையில் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், இந்த படத்தின் ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் பாடல்களுக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்துள்ளார். கல்யாண் மாஸ்டர் இந்த பாட்டுக்கு நடனம் அமைத்துள்ளார். மேலும் இந்த முதற்கட்ட படப்பிடிப்பில் சண்டைக் காட்சிகளும் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், அஜித்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், அஜித் இம்மாத இறுதியில் 'விடாமுயற்சி' படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார். அதன்பிறகு ஆகஸ்ட் மாதம் மீண்டும் 'குட் பேட் அக்லி' படத்திற்கான படப்பிடிப்பைத் தொடர உள்ளார் எனத் தகவல் வெளிவந்துள்ளது. அஜித்தின் 'குட் பேட் அக்லி' திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வந்த நிலையில் 'விடாமுயற்சி' படத்தை இந்த ஆண்டு தீபாவளிக்கு எப்படியாவது திரைக்கு வரவேண்டும் என்ற திட்டத்தோடு படக்குழு தீவிரமாக பணியாற்றி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: வேலை செய்த இடத்திலேயே கெளரவம்.. புர்ஜ் கலிப்பாவில் ஜொலித்த விஜய் சேதுபதியின் மகாராஜா!