சென்னை: நடப்பு (2024 – 2025) கல்வியாண்டிற்கான சித்தா, ஆயுர்வேதா, யுனானி மற்றும் ஹோமியோபதி ஆகிய மருத்துவ பட்டப்படிப்புகளில் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் சேர்வதற்கு, இன்று (ஆக.4) முதல் 27ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் எனவும், விதிமுறைகள் குறித்தும் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநரகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு மற்றும் சுயநிதி, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் அனைத்திற்கும், 2024 - 2025 ஆம் கல்வியாண்டிற்கான பி.ஏ.எம்.எஸ், பி.எஸ்.எம்.எஸ், பி.எச்.எம்.எஸ், பி.யு.எம்.எஸ் மருத்துவ பட்டப்படிப்புகளில் சேர்வதற்கு ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரையில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் தொகுப்பேட்டினை www.tnhealth.tn.gov.in என்ற சுகாதாரத் துறையின் வலைத்தள முகவரி மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்கள் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநரகத்திலோ, தேர்வுக்குழு அலுவலகத்திலோ வழங்கப்பட மாட்டாது. மேலும், அடிப்படைத்தகுதி, தரவரிசை, கலந்தாய்வு அட்டவணை மற்றும் பிற விவரங்களுக்கு www.tnhealth.tn.gov.in என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம் தபால், கொரியர் சேவை மூலமாகவோ அல்லது நேரிலோ ஆகஸ்ட் 27ஆம் தேதி மாலை 5.30 மணி வரை சமர்ப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் அரசு ஒதுக்கீட்டு இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பப்படிவங்களைச் செயலர், தேர்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநரகம், அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை – 600 106. முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
தேசியத் தேர்வு முகமையால் நடத்தப்பெறும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (இளநிலை மருத்துவம்) (NEET -UG) 2024ல் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே பி.ஏ.எம்.எஸ், பி.எஸ்.எம்.எஸ், பி.எச்.எம்.எஸ், பி.யு.எம்.எஸ் மருத்துவப் பட்டப்படிப்புகளுக்கான சேர்க்கை நடைபெறும்.
தமிழ்நாட்டில் உள்ள 5 அரசு மருத்துவக்கல்லூரிகளில் சித்தா, ஆயுர்வேதா, யூனானி மற்றும் ஹோமியோபதி படிப்புகளில் 330 இடங்களும், தனியார் சித்த மருத்துவக் கல்லூரிகளில் 800 இடங்களும், ஆயுர்வேதா மருத்துவக் கல்லூரிகளில் 310 இடங்களும், ஹோமியோபதி மருத்துவக் கல்லூரிகளில் 810 இடங்களும் என 2,300 இடங்கள் உள்ளது.
விண்ணப்பதாரர்களுக்குக் கலந்தாய்வு நேர்முகமாக மட்டுமே நடைபெறும். மேலும், விண்ணப்பதாரர்கள் தங்கள் சொந்த செலவிலேயே வரவேண்டும். கலந்தாய்வு தேதி, இடம் மற்றும் அனைத்து விவரங்களும் வலைத்தள முகவரி மூலமாக மட்டுமே அறிவிக்கப்படும். கலந்தாய்வு அன்று நேரில் வரத்தவறியவர்கள் தங்களது வாய்ப்பை இழந்து விடுவார்கள். கடைசி தேதிக்குப்பின் பெறப்படும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. மேலும், தபால், கொரியர் சேவையினால் ஏற்படும் காலதாமதத்திற்குத் தேர்வுக்குழு பொறுப்பாகாது" என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்