வயநாடு: கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கேரளாவின் வயநாடு மற்றும் உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி ஆகிய இரு நாடாளுமன்றத் தொகுதிகளில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வெற்றி பெற்றார். நாடாளுமன்ற உறுப்பினராக தொடர அவர் ஏதேனும் ஒரு தொகுதியை கைவிடும் சூழல் இருந்ததால், வயநாடு தொகுதியி்ன் எம்பி பதவியை ராஜினாமா செய்தார். இதனால் வயநாடு நாடாளுமன்றத் தொகுதி காலியானது.
இந்நிலையில், வரும் நவம்பர் 13ஆம் தேதி வயநாடு தொகுதிக்கு நாடாளுமன்ற இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா காந்தி அறிவிக்கப்பட்டுள்ளார். பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ், எல்டிஎப் சார்பில் சத்யன் மொகேரி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இதனால் வயநாடு இடைத்தேர்தல் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பிரியங்கா காந்தி இன்று வேட்புமனுத் தாக்கல் செய்யவுள்ளார். இதற்காக நேற்றே பிரியங்கா காந்தி தனது தாயும், காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவருமான சோனியா காந்தியுடன் கேரளாவுக்கு வந்தடைந்தார்.
இதையும் படிங்க: ரஷ்யா-உக்ரைன் போர் குறித்து ரஷ்யாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசியது என்ன?
அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கேரளாவுக்கு வந்துள்ளனர். இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பிரியங்கா காந்தி வேட்புமனுத் தாக்கல் செய்யும் நிகழ்வில் அவர்கள் இருவரும் பங்கேற்பர் என கூறப்படுகிறது.
வயநாடு இடைத்தேர்தலில் போட்டியிடும் பிரியங்கா காந்திக்கு காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், அகில இந்திய காங்கிரஸ் மூத்த தலைவர்களும் மற்றும் இந்தியா கூட்டணி தலைவர்களும் ஆதரவு தெரிவிக்க உள்ளனர். பிரியங்கா காந்தி இன்று வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கு முன்பாக, தனது சகோதரர் ராகுல் காந்தியுடன் கல்பெட்டாவில் காலை 11 மணிக்கு சாலை பேரணி நடத்தவுள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்