புதுதில்லி: கடந்த மே மாதம், அகில இந்திய அளவில் நடத்தப்பட்ட 2024 -25 ஆம் ஆண்டுக்கான நீட் இளநிலை நுழைவுத் தேர்வின் வினாத்தாள் கசிந்ததாகவும், முறைகேடுகள் நடைபெற்றதாகவும் கூறி, போட்டியாளர்கள் பலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இத்தேர்வை ரத்து செய்துவிட்டு, மறுதேர்வுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர்கள் தங்களது மனுவில் கோரியிருந்தனர்.
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இவ்வழக்குகளை ஒன்றாக விசாரித்து வந்தது. மனுதாரர்கள், என்டிஏ, சிபிஐ என அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்த வழக்கில், கடந்த மாதம் 23 ஆம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது. அதில் 'இந்த ஆண்டு நடத்தப்பட்ட நீட் இளநிலை நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம், அவ்வாறு ஒட்டுமொத்த தேர்வையும் ரத்து செய்வது நியாயமாக இருக்காது' என்றும் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், 2024 நீட் தேர்வை ரத்து செய்ய கோரிய மனுக்களை தள்ளுபடி செய்ததற்கான காரணங்களை விளக்கி, விரிவான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று அளித்துள்ளது. அதில், 'இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட ஆவணங்களில் அடிப்படையில் பாட்னா, ஹசாரிபாக் ஆகிய இடங்களை தவிர, வேறெங்கு தேர்வு முறைகேடுகள் நடைபெறவில்லை. குறிப்பிட்ட இடங்களில் நடைபெற்ற முறைகேட்டை கொண்டு, ஒட்டுமொத்த தேர்வின் உரிய நோக்கமும் சிதைந்துவிட்டதாக கருத முடியாது" என்று தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
மேலும், "1563 மாணவர்களுக்கு தவறான வினாத்தாள்கள் வழங்கப்பட்டதாக கூறப்பட்டது, அதற்காக அவர்களுக்கு கருணை மதிப்பெண் அளிக்கப்பட்டது, பிறகு அந்த மதிப்பெண்கள் ரத்து செய்யப்பட்டது, தேர்வு மையம் மாற்றம், 44 மாணவர்கள் 720க்கு 720 மதிப்பெண் எடுத்ததில் சர்ச்சை என பல்வேறு குளறுபடிகள், இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் நிகழ்ந்துள்ளன. நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்கும் முக்கியமான இத்தேர்வில் இதுபோன்ற குளறுபடிகள் இனி நிகழாதவண்ணம் இத்தேர்வு நடத்தப்பட வேண்டும்" என்று தேசிய தேர்வு முகமைக்கு நீதிமன்றம் கறாராக உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், கே,ராதாகிருஷ்ணன் தலைமையில் மத்திய அரசு அமைத்துள்ள நிபுணர் குழு, முற்றிலும் பாதுகாப்பான முறையில் நீட் தேர்வு நடைபெறுவதை உறுதிபடுத்துவது விதத்தில் நிலையான வழிகாட்டுதல் விதிமுறைகளை வகுக்க வேண்டும். நீட் தேர்வின் உயரிய நோக்கம் சிதையாமல் இருப்பதற்கான செயல்முறைகள் உள்ளிட்டவற்றையும் வகுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வழக்கு விசாரணையின்போது, மத்திய அரசு மற்றும் தேசிய தேர்வு முகமை சார்பில் ஆஜரான சொலிஜிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, நீட் தேர்வின் ஒட்டுமொத்த பாதுகாப்பை கருத்தில் கொண்டு உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுகள் அனைத்தும் செயல்படுத்தப்படும் என்று நீதிமன்றத்தில் உறுதியளித்தார்.
இதையும் படிங்க:"வாத்தியார் அடிச்சா குத்தமில்லை"- கேரள நீதிமன்றம் அதிரடி