டெல்லி: 2024 நாடாளுமன்றத் தேர்தல் தேதி இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தேர்தல் ஆணையர் அருண் கோயல் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஆனால், அவரது பதவிக்காலம் 2027 டிசம்பர் வரை உள்ளது. சட்ட அமைச்சக அறிவிப்பின்படி, அருண் கோயலின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஏற்றுக் கொண்டுள்ளார்.
1985 பஞ்சாப் கேடரின் ஐஏஎஸ் அதிகாரியான இவர், ஓய்வு பெற்ற அதிகாரி ஆவார். முன்னதாக, கடந்த பிப்ரவரியில் தேர்தல் ஆணையர் அனுப் பாண்டே ஓய்வு பெற்றார். இதன்படி, மூன்று உறுப்பினர்களைக் கொண்ட இந்தியத் தேர்தல் ஆணையக் குழுவில், தற்போது இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மட்டுமே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, கோயல் கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் விருப்ப ஓய்வு பெற்றார். அவர் விருப்ப ஓய்வு பெற்று ஒரு நாள் கழித்து, அதாவது கடந்த 2022ஆம் ஆண்டு நவ.19ஆம் தேதி, மத்திய அரசு அருண் கோயலை அவரச அவரசமாக தேர்தல் ஆணையராக நியமித்தது. இது குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
மேலும், நியமனம் குறித்த கோப்புகளை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் கூறியது. விருப்ப ஓய்வு பெறுவதற்கு முன்பு கோயல் மத்திய கனரக தொழில்துறை செயலாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு.. தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரணை!