ஆடி அமாவாசை: ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா அனந்தமங்கலம் கிராமத்தில் பழைமை வாய்ந்த ஸ்ரீ ராஜகோபால சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் தனிசன்னதியில் ஆஞ்சநேயர் எழுந்தருளி உள்ளார். இத்தகைய சிறப்பு மிக்க அனந்தமங்கலம் ஸ்ரீ திரிநேத்ர தச புஜ வீர ஆஞ்சநேயர் சுவாமி கோயிலில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை அன்று சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறும். இன்று (ஜூலை 28) ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆஞ்சநேயர் சுவாமியை கோயில் மண்டபத்தில் எழுந்தருள செய்து இன்று பகல் 12 மணிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இதில் பால், இளநீர், சந்தனம், தேன், மேலும் பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து ஆஞ்சநேய சுவாமிக்கு துளசி, வெற்றிலை, எலுமிச்சை மற்றும் வடைகளால் மாலைகள் அணிவித்து மகா தீபாராதனை நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.