மீண்டும் தொடங்கிய உப்பு உற்பத்தி!
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மத்திய, மாநில அரசுகளுக்கு சொந்தமான 3,500 ஏக்கர் பரப்பளவிலான உப்பளங்கள் உள்ளன. இதிலிருந்து ஆண்டுதோறும் சுமார் 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்து, அண்டை மாநிலங்களான புதுவை, ஆந்திராவுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். இத்தொழிலை நம்பி 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளர்கள் உள்ளனர். இங்கு ஆண்டுதோறும் ஜனவரி மாதம் தொடங்கும் உப்பு உற்பத்தி தொடர்ந்து அக்டோபர் முதல் நவம்பர் மாதம் வரையில் நடைபெறும். ஆனால் கடந்த 2 மாதத்துக்கு முன் பெய்த கனமழை காரணமாக கடல்நீர் பக்கிங்காம் கால்வாய் வழியாகப் புகுந்ததில் உப்பளங்கள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கிவிட்டது. இதனால் உப்பு உற்பத்தி செய்வதற்கு சிறிது காலதாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் இப்பகுதியில் கடந்த 20 நாள்களுக்கும் மேலாக உப்பு உற்பத்தி செய்வதற்கான முதல்கட்டப் பணிகளான பாத்திகள் அமைத்தல், கால்வாய்கள் அமைத்தல், உப்பு பாத்திகளைப் பதப்படுத்துதல் ஆகிய பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டுவருகின்றன.