Published : Oct 25, 2023, 10:58 AM IST
நவராத்திரி விழா: சென்னிமலையில் வெகு சிறப்பாக நடந்த வாணாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி!
ஈரோடு: நவராத்திரி விழாவை முன்னிட்டு சென்னிமலை கைலாசநாதர் கோயிலில் கடந்த ஒன்பது நாட்களாக சாமிக்குக் கொழு வைத்துச் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மேலும் கோயிலில் உள்ள சாமிகள் தினமும் ஒரு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்குக் காட்சி அளித்தனர். நவராத்திரியின் 10வது நாளான நேற்று (அக். 24) மாலை விஜயதசமியை முன்னிட்டு அம்புசேவை நிகழ்ச்சி நடைபெற்றது.
அசுரனை வதம் செய்வதற்காக சென்னிமலை கைலாசநாதர் கோயிலில் இருந்து வில், அம்பு, வால் போன்ற ஆயுதங்களுடன் முத்துக்குமாரசாமி குதிரை வாகனத்தில் புறப்பட்டார். அப்போது வள்ளி, தெய்வானை ஆகியோர் தனி சப்பரத்தில் உடன் வந்தனர். முத்துக்குமாரசாமி மற்றும் வள்ளி, தெய்வானை ஆகியோர் ராஜ வீதிகள் வழியாக வலம் வந்து பிராட்டியம்மன் கோயில் வாசலை அடைந்தனர்.
அங்கு சென்னிமலை முருகன் கோயில் தலைமை குருக்கள் தலைமையில் முருகப்பெருமான் மற்றும் வள்ளி தெய்வானைக்குச் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து வாழை மரம் உருவத்தில் இருந்த 'வாணாசூரன்' என்ற அசுரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ச்சியாக முத்துக்குமாரசாமி மீண்டும் வள்ளி தெய்வானையுடன் புறப்பட்டு கைலாசநாதர் கோவிலை அடைந்தார். இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.