கலெக்டர் ஆவதே கனவு.. பள்ளி மாணவிக்கு இன்ப அதிர்ச்சி.. கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த பழங்குடி மக்கள்!
திருப்பத்தூர்:திருப்பத்தூர் மாவட்டம், பாச்சல் கிராமம் இதயம் நகர் பகுதியில் வசித்து வரும் 53 நரிக்குறவர் சமூக மக்களுக்கு கடந்த 26 ஆம் தேதி பழங்குடியினர் சாதி சான்றிதழ்கள் வழ்ங்கப்பட்டது. இதனை பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்.
அதன் அடிப்படையில் நரிக்குறவர்யின மக்கள் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் நேற்று(ஜூன் 7) நடைபெற்றது. அப்போது மெய்விழி 10ஆம் வகுப்பு பயிலும் மாணவி மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் நான் எதிர்காலத்தில் ஒரு மாவட்ட ஆட்சியராக வரவேண்டும் என்று தன்னுடைய ஆசையை தெரிவித்தார்.
அதனைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்த மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் உடனடியாக தனது இருக்கையில் அந்த மாணவியை அமரவைத்து மகிழ்ச்சியில் ஆழ்த்தியதோடு மாணவியின் எதிர்கால கனவு மெய்ப்பட வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்தார். பின்னர், நரிக்குறவர்யின மக்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியருக்கு பொன்னாடை போத்தி தங்களது நன்றியினை தெரிவித்தனர். பள்ளி மாணவியை தனது இருக்கையில் அமர வைத்து அழகு பார்த்த ஆட்சியரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.