ஓடும் கண்டெய்னர் லாரிக்கு இடையே சிக்கிய பைக்.. உடல் நசுங்கி ஒருவர் பலி; பதைபதைக்க வைக்கும் காட்சி!
திண்டுக்கல்: பள்ளபட்டியைச் சேர்ந்தவர் தமிழேந்திர சர்க்கார் (35). இவர், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் பணியாற்றி வருவதாகக் கூறப்படுகிறது. அம்மையநாயக்கனூர் பகுதியில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் அவரது மனைவி ஜீவிதா (24) ஆசிரியராகவும் மகள் அதே பள்ளியில் பயின்று வருகிறார்கள்.
இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் மனைவி மற்றும் மகளை ஏற்றிக் கொண்டு பள்ளப்பட்டியில் இருந்து அம்மையநாயக்கனூர் நோக்கிச் சென்ற போது பொட்டிசெட்டிபட்டி பிரிவிலிருந்து தேசிய நெடுஞ்சாலையில் எதிரே வைத்திருந்த இரும்பு சாலை தடுப்பில் மோதி தடுமாறிய போது அவருக்குப் பின்னால் வந்த கண்டெய்னர் லாரியில் இருசக்கர வாகனம் சிக்கியது.
இதில் அதிர்ஷ்டவசமாக தமலேந்திர சர்க்காரின் மனைவி மற்றும் மகள் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர். கண்டெய்னர் லாரியின் பின்புற சக்கரத்தில் மாட்டிக் கொண்ட தமிழேந்திர சர்க்கார் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் உடலை தரதரவென இழுத்துச் சென்று சாலையின் நடுவே உருக்குலைந்த நிலையில் கிடந்தார்.
தமிழேந்திர சர்க்காரின் உடலைப் பார்த்த வாகன ஓட்டிகள் காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தனர். தகவல் அளித்ததன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த அம்மையநாயக்கனூர் காவல் துறையினர் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக திண்டுக்கல் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சிறு காயங்களுடன் உயிர் தப்பிய மகள் மற்றும் மனைவி ஆகிய இருவரும் அம்மையநாயக்கனூர் அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் முதல் உதவி சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காகத் தனியார் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். வாகன ஓட்டிகள் மற்றும் இறந்தவரின் உறவினர்கள் கூறுகையில், சாலையில் புதிதாக வைக்கப்பட்டுள்ள இரும்பு தடுப்புகளால் தான் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
தொடர்ந்து இதுவரை அந்த பகுதியில் நான்கு விபத்துக்கள் நடைபெற்று இருக்கிறது இரண்டு நாட்களில் சாலையில் வைக்கப்பட்ட தடுப்புகளால் இருவர் பலியான சம்பவம் இப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. முன்னறிவிப்பு இன்றி தான்தோன்றித்தனமாக காவல்துறையினர் வைக்கக்கூடிய இரும்பு தடுப்புகள் பலரது உயிரைக் காவு வாங்குவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். எனவே போக்குவரத்து உயர் அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து சீரான அளவில் இரும்பு தடுப்புகளை வைக்கப் போட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:கோயில் கிணற்றில் தவறி விழுந்த 25 பேரை மீட்கும் பணி தீவிரம்!