Published : Aug 22, 2023, 12:28 PM IST
"கண்டக்டர் சார்.. இந்தாங்க.. 500 ரூபாய்க்கு டிக்கெட் போட்டு கொடுங்க" - மாணவர்களோடு சபாநாயகர் அப்பாவு பயணம்!
திருநெல்வேலி:நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே கேசவநேரியில் பொதுமக்களின் கோரிக்கையான புதிய பேருந்து சேவையை துவக்கி வைத்து, தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு பள்ளி மாணவர்களுடன் பேருந்தில் பயணம் செய்தார். நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே கேசவநேரி கிராமத்தில் இருந்து போதிய பேருந்து வசதி இல்லாமல் பள்ளி மாணவர்கள் அவதி அடைந்து வந்தனர். இது குறித்து சபாநாயகரிடம் பேருந்து வசதி செய்து தரக்கோரி அப்பகுதி மக்கள் மற்றும் மாணவர்கள் மனு அளித்தனர்.
அதனைதொடர்ந்து, போக்குவரத்து கழக அதிகாரிகளை தொடர்பு கொண்டு, பேருந்து வசதி வழங்க சபாநாயகர் நடவடிக்கை மேற்கொண்டார். இந்நிலையில் வள்ளியூர் பணிமனையில் இருந்து புதிய பேருந்து வசதியை, சபாநாயகர் அப்பாவு கொடி அசைத்து துவக்கி வைத்தார். பின்னர், கேசவநேரியில் இருந்து பள்ளி மாணவர்களோடு பேருந்தில் பயணம் செய்தார்.
மேலும், நடத்துனரிடம் 500 ரூபாய் பணம் கொடுத்து அனைவருக்கும் டிக்கெட் கொடுங்கள் என்றார். நடத்துனரும் பேருந்தில் பயணித்த பொது மக்கள் மற்றும் திமுகவினருக்கு சபாநாயகர் கொடுத்த பணத்தில் டிக்கெட் வழங்கினார். கேசவநேரி கிராமத்தில் இருந்து பேருந்து காலை ஒரு முறையும், மாலை ஒரு முறையும் என 2 முறை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிகழ்ச்சியில் வள்ளியூர் பேரூராட்சி தலைவர் ராதா, மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் மற்றும் திமுக நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.