தேனி:இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க மாட்டோம் என சீர்மரபினர் இன மக்கள் பாலில் சத்தியம் செய்து தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள முத்தலாபுரத்தில் சீர்மரபினர் இனத்திருக்கு துரோகம் விளைவித்ததாக கூறி, அ.தி.மு.க-வின் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க மாட்டோம் எனக் கூறி, சீர்மரபினர் இன மக்கள் ஒன்றாக இணைந்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியும், அந்த ஊரில் ஏற்றப்பட்டிருந்த அ.தி.மு.க கொடியை இறக்கியும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் பாலில் சத்தியம் செய்யும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டமானது, முத்தலாபுரம் ஊராட்சி கிளை செயலாளர் மலைச்சாமி தலைமையில் நடைபெற்றது. மேலும் போராட்டத்தில் எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த போராட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:விளையாட்டு வினையானது! நண்பர்களோடு விளையாடச் சென்ற மாணவன் மலையிலிருந்து தவறி விழுந்து உயிரிழப்பு!