14 அடி உயர அத்தி மரத்தால் ஆன 'வானமுட்டி பெருமாள்' கோயில் தேரோட்டம்!
மயிலாடுதுறை:கோழிகுத்தி கிராமத்தில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ சீனிவாச பெருமாள் என்ற வானமுட்டி பெருமாள் ஆலயம் உள்ளது. மூலவர் 14 அடி உயரத்தில் மிக பிரம்மாண்டமான அத்தி மரத்தால் இயற்கையாக உருவானவர். பிப்பில மகரிஷி வழிபட்டு சனி கவசம் பாடிய இந்த ஆலயத்தில் கிபி 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பல சோழ மன்னர்களின் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.
இத்தகைய பழமையான இந்த ஆலயத்தில் தைமாத பிரமோற்சவ விழா கடந்த 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று (ஜன.22) நடைபெற்றது. ஶ்ரீதேவி, பூமிதேவி சமேத சீனுவாசபெருமாள் தேரில் எழுந்தருளினர்.
மகாதீபாரதனைக்கு பிறகு தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிறுவர்கள் கோலாட்டம் ஆட, செண்டை மேளம் முழங்கத் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரானது கோயிலின் நான்கு வீதிகளையும் சுற்றி வந்து நிலையை அடைந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க: மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் தை அமாவாசை ஊஞ்சல் உற்சவம்!