வேலூர்: பொதுமக்களுக்குச் செயல் விளக்கம் அளிப்பதற்காக மின்னணு வாக்கு இயந்திரங்கள் வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களுக்கும் பிரித்து அனுப்பும் பணியானது வேலூர் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் தலைமையில் இன்று (டிச.15) நடைபெற்றது.
நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த சில மாதங்களில் நடைபெற உள்ளதை முன்னிட்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் நிலை சரிபார்ப்பு பணி முடிக்கப்பட்டு, மொத்தமாக 2096 கட்டுப்பாட்டுக் கருவிகள், 4879 வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் 1937 வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை கருவிகள் முதலியன வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
இதன் இடையே, தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி பொதுமக்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து செயல்முறை விளக்கம் அளிப்பதற்காக மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கும் வட்டாட்சியர் அலுவலகங்களுக்கும் மின்னணு வாக்கு இயந்திரங்களைப் பிரித்து அனுப்பும் பணி இன்று (டிச 15) நடைபெற்றது.