கரோனா அச்சுறுத்தல் காரணமாக போக்குவரத்து, தொழிற்சாலை, சிறு குறு வியாபாரங்கள் என பல கட்டமைப்புகள் முடங்கின. மேலும் கரோனா தடுப்பு நடவடிக்கையாக பொதுப்போக்குவரத்துகளான சர்வதேச விமானப்பயணம் மற்றும் ரயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் ஏழை, நடுத்தர மக்கள் மிகவும் பயன்படுத்தும் வகையில் தேசிய அளவிலான பொதுப்போக்குவரத்தான ரயில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியிருப்பது, ஆயிரக்கணக்கான குடும்பங்களை நிலைகுலையச் செய்துள்ளது. குறிப்பாக, இந்த ரயிலை நம்பி நூற்றுக்கணக்கான உப தொழில்கள் நடைபெற்று வந்தது. மேலும் ரயில் சேவையை மட்டுமே நம்பி இருந்த இத்தகைய தொழில்கள் தற்போது செய்வதறியாது திகைத்து நிற்கின்றன.
அந்த வகையில் ரயில்களில் இன்பச் சுற்றுலா, ஆன்மிகச் சுற்றுலா அழைத்துச் செல்லும் முகவர்கள் செயல்பட்டுக் கொண்டிருந்தனர். ரயில் முடக்கம் காரணமாக இந்த முகவர்கள் சுற்றுலா ஏற்பாடு செய்ய முடியாமல் முடங்கி உள்ளனர். இதனால் இவர்கள் வாருவாய் ஏதுமின்றி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுபோல டிக்கெட் புக்கிங் ஏஜென்ட்களும் இந்த ரயில் சேவை நிறுத்தத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக திருச்சியில் உள்ள சுற்றுலா ரயில்கள் மற்றும் பொது ரயில்கள் அனைத்தும் டிக்கெட் புக்கிங் செய்து வந்த பாலக்கரையைச் சேர்ந்த கோல்டன் அசோசியேட்ஸ் என்ற நிறுவனம், கரோனா தொற்று காரணாமாக கடந்த 6 மாதமாக பூட்டப்பட்டுள்ளது.
இது குறித்து சுற்றுலா அழைத்துச் செல்லும் திருச்சியைச் சேர்ந்த ராஜா என்பவர் கூறுகையில், 'மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை இரண்டு குழுவினரை இன்பச் சுற்றுலா அல்லது ஆன்மீக சுற்றுலா அழைத்துச் செல்வோம். கரோனா தொற்று காரணமாக கடந்த ஆறு மாதங்களாக எங்களால் சுற்றுலா அழைத்துச் செல்ல முடியவில்லை. ஆனால், மக்கள் சுற்றுலா செல்வதற்கு ஆர்வமாக இருக்கிறார்கள்.
கடந்த 10 ஆண்டுகளாக இன்பச் சுற்றுலா மற்றும் ஆன்மிகச் சுற்றுலாவுக்கு நாங்கள் அழைத்துச் சென்று வருகிறோம். லாபம் இல்லாமல் சேவை நோக்கோடு, இதை நாங்கள் செய்து வந்தோம். சீரடி போன்ற ஆன்மிக ஸ்தலத்திற்கு குறைந்த செலவில் மக்களை அழைத்துச் சென்று வந்தோம். இதுபோன்ற சுற்றுலாக்கள் விமானம் மூலமோ அல்லது கார்கள் மூலமோ சென்றால் அதிக அளவில் செலவாகும். குறிப்பாக முதியவர்கள் ரயில்களில் மட்டுமே சவுகரியமாக பயணம் செய்ய முடியும். அவர்களை சுற்றுலா அழைத்துச் செல்ல முடியவில்லை என்பதை எங்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. எனினும் விரைவு ரயில்கள் ஓடும் என்ற அறிவிப்பு வெளியாகி கொண்டிருக்கின்றன. அதனால் மீண்டும் சுற்றுலா தொடங்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது' என்றார்.