தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 20, 2023, 5:14 PM IST

ETV Bharat / state

குடியிருப்பை அகற்றக் கோரி நெடுஞ்சாலைத் துறை நோட்டீஸ்... பதறிய மக்கள்! வட்டாட்சியர் மூலம் தீர்வு!

துவரங்குறிச்சி கிராமம் ஆத்துப்பட்டியில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், அந்த இடம் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமானது எனக் கூறி உடனடியாக காலி செய்ய சொல்வதாக அப்பகுதி மக்கள் மாற்று இடம் வேண்டி மருங்காபுரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Residential eviction issue
குடியிருப்பு அகற்றல் விவகாரம்

Residential eviction issue

திருச்சி:மருங்காபுரி வட்டம் பொன்னம்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட துவரங்குறிச்சி கிராமம் ஆத்துப்பட்டியில், சர்வே எண்: 83-ல் கடந்த சுமார் 60 வருடங்களுக்கும் மேலாக 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். இரண்டு தலைமுறையாகக் குடியிருந்து வரும் இந்த இடம், வண்டிப்பாதை என்று வருவாய்த்துறை ஆவணத்தில் யூடிஆர் செய்யப்படுவதற்கு முன்பு இருந்துள்ளது.

மேற்படி இவர்கள் குடியிருக்கும் வீட்டிற்கு முறையாக வீட்டு ரசீது, விஏஓ சான்று, வீட்டு மின் இணைப்புக்கான ரசீது, ஆதார் கார்டு, குடும்ப அட்டை என மேற்கண்ட முகவரியில் வசிப்பதற்கான மாநில, மத்திய அரசின் ஆவணங்களும், திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் குறை தீர்ப்பு பிரிவில் 2012ஆம் வருடம் பட்டா கேட்டு அளித்த மனு நகலும் வைத்துள்ளனர்.

மேலும், தினக் கூலி வேலைக்குச் செல்லும் இவர்களுக்கு வேறு எங்கும் இடம் கிடையாது. வறுமையில் கஷ்டப்பட்டு வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த அக்டோபர் 10ஆம் தேதி அன்று இவர்கள் வசிக்கும் அந்தப் பகுதி நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமானது என்றும், உடனடியாக வீட்டை காலி செய்ய வேண்டும் என்றும் மணப்பாறை நெடுஞ்சாலைத் துறையினர் அறிவிப்பு கடிதம் அனுப்பி உள்ளனர்.

இந்த திடீர் அறிவிப்பு கடிதத்தை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள், தங்களுக்கு மாற்று இடம் வழங்கிட கோரி மாவட்ட ஆட்சியர் மற்றும் முதலமைச்சருக்கு இதுகுறித்து பதிவுத் தபாலில் மனு அனுப்பி உள்ளனர். ஆனால், மனு கொடுத்து பல மாதங்கள் ஆகியும் பதில் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று (நவ. 19) நெடுஞ்சாலை விரிவாக்க பணி மேற்கொள்ளும் பணியாளர்கள், குடியிருப்பு பகுதியை விட்டு காலி செய்ய வேண்டும் என்றும் இல்லையெனில் வீட்டை இடித்து தரைமட்டமாக்கி விடுவதாகவும் கூறியதாக சொல்லப்படுகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் பெரிதும் மனவேதனைக்கு தள்ளப்பட்டனர்.

இதையடுத்து, அப்பகுதி பொதுமக்கள் மாற்று இடம் கேட்டு மனு அளித்து பல மாதங்கள் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், இன்று (நவ. 20) மருங்காபுரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு குடும்ப அட்டைகள் மற்றும் ஆதார் அட்டைகளை திரும்ப ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, சிறிது நேரத்தில் அலுவலகத்திற்கு வருகை புரிந்த வட்டாட்சியர் செல்வசுந்தரி, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அருகிலுள்ள உப்பிலியபுரம் கரடு பகுதியில் குடியிருப்புகளை அமைத்துக் கொள்ளவதற்கு ஏற்பாடு செய்து தருவதாகக் கூறினார்.

மேலும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் பேசி, பொதுமக்கள் தங்கள் குடியிருப்புகளை இடம் மாற்றிக் கொள்வதற்காக இருபது நாட்கள் கால அவகாசத்தைப் பெற்றுத் தந்தார். இதையடுத்து பொதுமக்கள் பேச்சு வார்த்தைக்கு உடன்பட்டு வட்டாட்சியருக்கு நன்றி தெரிவித்து கலைந்து சென்றனர்.

இதையும் படிங்க:விஜயகாந்த் உடல்நிலை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட தகவல்!

ABOUT THE AUTHOR

...view details