தமிழ்நாடு

tamil nadu

சீமான் உள்ளிட்ட 500 பேர் மீது வழக்குப்பதிவு

By

Published : Mar 25, 2023, 5:26 PM IST

திருச்சியில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட 500 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

NTK Seeman
NTK

திருச்சி விமான நிலையத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சியினருக்கும், மதிமுகவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக, காவல்துறையினர் பதிவு செய்த வழக்கில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேற்றைய முன்தினம் 23ஆம் தேதி காலை ஆஜரானார்.

இந்த சம்பவம் தொடர்பாக மதிமுகவினர் கொடுத்த புகார் மீதான வழக்கில், சீமான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விடுதலை செய்யப்பட்டு விட்டார். திருச்சி ஏர்போர்ட் காவல் நிலையத்தில் காவல் துறை தரப்பில், வழக்கு பதிவு செய்யப்பட்டது. திருச்சி விமானநிலையத்தில் கலகம் செய்யும் நோக்கத்தோடு கூடியது, ஆயுதங்களை வைத்திருந்தது, பொது சொத்துக்கு சேதம் விளைவிப்பது உள்ளிட்ட வழக்குகள் நாம் தமிழர் கட்சியினர் மீதும் மதிமுகவினர் மீதும் பதிவு செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்பான வழக்கில் நாம் தமிழர் கட்சி சார்பில் சீமான் உள்ளிட்டோரும் மதிமுகவினரும் நேற்றைய முன்தினம் ஆஜராகினர். வழக்கை விசாரித்த திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி பாபு, வழக்கின் விசாரணையை வரும் ஏப்ரல் 19 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார். நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த பின்பு செய்தியாளர்களை சந்தித்த சீமான், ராஜீவ் கொலை வழக்கில் 30 ஆண்டுகாலம் சிறை தண்டனை அனுபவித்த சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் அவர்களை விடுதலை என்கிற பெயரில் சிறையில் இருந்து சிறப்பு முகாம் என்கிற கொடுஞ்சிறைக்கு மாற்றியுள்ளார்கள்.

இது எப்படி விடுதலை ஆகும். அவர்கள் நான்கு பேரையும் உடனடியாக சிறப்பு முகாமிலிருந்து விடுதலை செய்ய வேண்டும். கடந்த 23 ஆம் தேதி போராட்டம் நடத்த அனுமதி கேட்டு இருந்தோம். ஆனால், காவல்துறை அதற்கு அனுமதி தரவில்லை. தமிழ்நாட்டில் ஜனநாயகம், கருத்து சுதந்திரம் என பேசுகிறார்கள். ஆனால் அது நடைமுறையில் இல்லை. அனுமதி வழங்கவில்லை என்றாலும் திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் அனுமதி இல்லாத நிலையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் நாம் தமிழர் கட்சி சார்பாக தடையை மீறி மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்நிலையில் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட 500 பேர் மீதும் 143, 153, 504, 506(1), 41/6 சிட்டி போலீஸ் ஆக்ட் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:"சிறையோ,தகுதி நீக்கமோ" அச்சமில்லை எனக்கு - ராகுல்காந்தி பேச்சு

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details