இது தொடர்பாக அவர் இன்று (செப்டம்பர் 9) வெளியிட்டுள்ள அறிக்கையில், " ‘அரியர்ஸ்’ தேர்வுக்கான கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவரும் தேர்வெழுதாமலேயே தேர்ச்சி பெறுவார்கள் என முதலமைச்சர் பழனிசாமி அவசரப்பட்டு அறிவித்ததிலிருந்தே குழப்பங்கள் நீடித்தபடியே இருக்கின்றன. உரிய ஆலோசனைக்குப் பிறகு, இது சாத்தியமெனில் கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கும் தேர்ச்சி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தேன். அது குறித்தும் முறையான ஆலோசனை எதையும் இந்த அரசு செய்யவில்லை.
இந்நிலையில், முதலமைச்சரின் அறிவிப்பே அவசரமானது, அரைவேக்காட்டுத்தனமானது என்பதையே தற்போது வெளியாகும் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. தேர்வு இல்லாமல் - மதிப்பெண் வழங்காமல் தேர்ச்சி என்பது உயர்படிப்புகளிலும் - தொழில் நிறுவனங்களின் வேலை வாய்ப்புகளிலும், மாணவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் குழுமம், அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தருக்கு அனுப்பிய கடிதம் நேற்று (செப்டம்பர் 8) வெளியாகியிருந்தது.