திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர், வாணியம்பாடி பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்தது. இதனிடையே கரோனோ வைரஸ் தொற்று காரணமாக தமிழ்நாட்டில் 144 தடை உத்தரவு அறிவிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டிருப்பதால் கடந்த சில நாட்களாக பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கின்றனர்.
இதையடுத்து இப்பகுதிகளில் திடீரென காற்றுடன் கூடிய மழை பெய்யத் தொடங்கியது. ஆம்பூர் பகுதியை அடுத்த வீராங்குப்பம், மேல் சான்றோர் குப்பம், குமாரமங்கலம் பகுதிகளில் ஆலங்கட்டி மழையாக பெய்தது. இதனால் சுற்றுவட்டார பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
அதேபோல் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் பகுதியில் சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக காற்றுடன் கூடிய மழை பெய்தது.
திருப்பத்தூர் மாவட்டத்தைப் போல் சேலத்திலும் பகல் பொழுதில் வெயில் சுட்டெறித்த நிலையில், மாலைப் பொழுதில் கருமேகம் சூழ்ந்துகொண்டு வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அத்துடன் பலத்த சூறைக்காற்றும் வீசியதில் சாலைகளில் புழுதி பறந்தது. காற்றின் வேகம் தாங்காமல் ஆங்காங்கே மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.